Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 13 ஆகஸ்ட், 2014

விஞ்ஞானம்

விஞ்ஞானம்

அறிஞர் பெருமக்களே! உங்கள் அனைவரையும் வணங்கியும், வாழ்த்தியும் மனநிறைவு பெறுகிறேன். நாம் ஒரு பெரிய சமுதாய சேவையை இந்த நூல் மூலம் எழுதி முடித்து, உலக மக்களுக்கு அளிப்பதற்காக, நாம் முழுமுயற்சியும் எடுத்துக் கொண்டு இந்த புனிதமான செயலிலே ஈடுபட்டு இருக்கிறோம்.

இது...வரையில் நமது ஆராய்ச்சி மூலமாக இறைநிலையின் விளக்கம் அளித்திருக்கிறோம். இப்பொழுது அதே இறைநிலை தன்மாற்றம் அடைந்த வரிசையில் உலகம், மற்ற கோள்களின் தோற்றங்கள், உலகில் உயிரினங்களின் தோற்றங்கள் தொடங்கி மனித இனம் வரையில் எவ்வாறு வந்தன என்று இப்பொழுது சிந்திக்க இருக்கிறோம்.

இந்த இடத்தில் மீண்டும் ஒருமுறை இறைநிலையின் முறையான தன்மாற்ற விதிமுறைகளையும், அவற்றின் விளைவுகளையும் பற்றிச் சிறிது நேரம் சிந்தனைக்குக் கொண்டு வருவோம்.

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நால்வகைச் சிறப்புகளும் உடையதுதான் இறைநிலை என்று உணர்ந்து கொண்டோம். இறைநிலை என்பது சுத்தவெளிதான் என்றும், அதுவே பேராதாரப் பெருவெளியாக விளங்கும் சிறப்பையும் உணர்ந்தோம். ஆயினும், அது புலன்களுக்கு எட்டாத மறைபொருளாகையால் அதைப்பற்றி மொழியில் விளக்கமாக கூறவோ, மற்றவர்களுக்கு தெளிவாக அறிவிக்கவோ மிகவும் சிரமமாக இருக்கிறது.

இதனால்தான் லட்சக்கணக்கான ஆண்டுகள் மனித இனம் வாழ்ந்து பல வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுள்ள போதிலும் இறைநிலையைப் பற்றி தெளிவாக உணரமுடியவில்லை. ஆறாவது அறிவின் உச்ச கட்டத்தில் அதற்கு நுண்மாண் நுழைபுலன் என்ற சிறப்பு உண்டாகிறது. நுண்ணிய பொருளாகவும், மதிப்புக்குறிய பொருளாகவும், புலன்களுக்கு எட்டாத மறைபொருளாகவும் இறைநிலை இருப்பதால், மனிதன் சிந்தனை ஆற்றல் உயர்ந்த நிலையில் அவனிடம் அமையும் நுண்மாண் நுழைபுலன் என்ற ஆறாவது அறிவின் சிறப்பால் மட்டுமே தெய்வநிலையைத் தெளிவாக உணரவும் முடியும், மற்றவர்களுக்கும் உணர்த்தவும் முடியும்.

இக்காரணங்களால் தான் தெய்வநிலை பற்றிய அறிவு மனித இனத்துக்கு இதுவரையில் தெளிவாகக் கிட்டவில்லை. இந்த இயலாமை காரணமாக ஒரு சில காலங்களில், இடங்களில் சில அறிஞர்கள் அவர்களுடைய கற்பனைத் திறனால் இறைநிலைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் சில உண்மைக்குப் புறம்பானச் செய்திகளாக அமைந்து விட்டன. நம்பிக்கை வழியே ஒருவரிடம் மற்றவர் அறிவின் விளக்கத்தைக் கேட்டு வாழ்ந்த காலத்தில் உண்மைக்கு முரணான செய்திகள் பல வாழ்வில் மனித சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பிற்காலத்தில் அத்தகைய கற்பனையான கடவுள் நிலைகளுக்கு உண்மையான காரணங்களைச் சிலர் கண்டுபிடித்து, பக்தி வழியில் ஈடுபட்டிருக்கும் மக்களை, ஓரளவு திருத்தம் செய்திருக்கிறார்கள். பண்பாட்டையே உயர்த்தும் பண்பாட்டுச் சீர்திருத்தமாக அமைந்த போதிலும், பெரும்பாலோர் நம்பிக்கை வழியே கற்ற சிலை வழிபாடுகளை வாழ்வில் தொடர்ந்து பயின்று வருகிறார்கள். இதனால் மக்கள் குலத்திற்கு முழுமையான உண்மைநிலை விளக்கும் பேரறிவு மூலம், இறையுணர்வு இன்னமும் வந்து சேரவில்லை.

இத்தகைய சிக்கலான நிலையில்தான் இறைநிலையின் ஆராய்ச்சியை நாம் தொடங்கியிருக்கிறோம். இந்த ஆராய்ச்சியில், நான் கண்ட இவ்வுண்மைகளை, தற்காலத்தில் நிலவும் பேச்சு மொழியில் நாம் விளக்கி வந்தாலும், அதே நேரத்தில் நமது கருத்துக்கள் தொலைநோக்கு கொண்ட முற்கால தத்துவ ஞானிகள் கருத்துக்கும், தற்காலத்தில் சிறந்து உயர்ந்து கொண்டே வரும் அறிவியல் துறையான விஞ்ஞானத்திற்கும், எந்த விதத்தும் முரண்படாத அளவில் நமது சிந்தனையை முடிவான கருத்துக்களாக உருவாக்கி, மக்களுக்கு அளித்து வருவதின் தொடக்கம்தான் இந்த நூல்.

இந்த நூலைப் படிக்கும் பேரறிஞர்கள், அவர்கள் அறிவில் காணும் தெளிவான விளக்கங்களையும், இறைநிலை பற்றிய உண்மைகளைக் கூறும் வழிமுறைகளைப் பற்றியும் எனக்கு அன்போடு அறிவிக்கலாம். என்னோடு கலந்துரையாடி சிறந்த முடிவுகள் மனித இனப் பண்பாட்டின் சிறப்புக்கும், உயர்வுக்கும் அளித்து மகிழலாம்.

அறிஞர் பெருமக்களே! முதலில் இறைநிலையைப் பற்றி நாம் இதுவரையில் உணர்ந்த தெளிவுகளை மீண்டும் ஒரு முறை நினைவுக்கு கொண்டு வருவோம்.

1. வெட்டவெளியென்ற பேராதாரப் பெருவெளியே எல்லாம் வல்ல தெய்வநிலை.

2. அதற்கு இயல்பாக உள்ள ஆற்றல் தன்னிறுக்கமாகும். வேறு எவ்விதத்தும் செயல்பட முடியாதவாறு தன்னையே அது இறுக்கிக் கொள்ளுகிறது.

3. அவ்வாறான தன்னிறுக்கம் அதிகரித்து நுண்மையான துகள்நிலையாக, இறைநிலை தன்மாற்றம் அடைகிறது.

4. இவ்வாறு துகள்களான பிறகு அவை எங்கு போகும்? இறைவெளியைத் தவிர பிரபஞ்சத்தில் வேறு இடம் ஏது? அப்படி இறைநிலையிலேயே ஆழ்ந்துவிட்ட இறைதுகள்களைச் சுற்றி அமைந்திருப்பது இறைவெளிதானே? தன்னிறுக்கமாக இருந்த ஒரு பேராற்றல் இப்பொழுது தன்னிலே தோன்றிய இறைத்துகள்களைச் சுற்றி அழுத்திக் கொண்டிருக்கிறது. எல்லையற்ற இறைவெளியின் இறுக்க அழுத்தத்தால் ஒவ்வொரு இறைத்துகளும் விரைவாக சுழல ஆரம்பித்தது, இதனால் இறைத்துகள்கள் நுண்துகள் நிலையிலிருந்து அலைநிலையாக தன்மாற்றம் பெற்றுவிட்டது.

இறுக்க ஆற்றலால் நுண்ணிய துகளாக மாறிய இறைநிலை இப்பொழுது தன்மாற்றத்தில் இரண்டாவது வரிசையான இறைத்துகளாகி விட்டது. இதனால் இறைத்துகள் ஒவ்வொன்றும் அளக்க முடியாத விரைவில் தற்சுழற்சி பெற்றன. முன்னமே ஒரே தொடராக இருந்த இறைநிலை இப்பொழுது துகள் வடிவம் பெற்று தற்சுழல் விரைவு பெற்று விட்டதனால், அது தனது உருவநிலை இழந்து அலை நிலைக்கு தன்மாற்றம் பெற்றுவிட்டது.


இறைத்துகள் என்பது இப்பொழுது என்னவென்று நினைந்து கொள்வோம்? இறைநிலையின் நுண்பகுதியே தான்! அவை இருக்கும் இடமோ இறைநிலையே. அதன் இயக்க விரைவு என்ற பேராற்றல் இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினாலேயே ஆகும். இதனால் இடமாக இருப்பதும், பொருளாக இருப்பதும், இயக்கமாக இருப்பதும் மூன்றும் நமது மனதுக்கு ...தனித்தனியாக இருந்தாலும், அது ஒரே ஆற்றல்தான், இவ்வாறு மூன்று வழிகளிலும் சிறப்புபெற்ற இறைத்துகள்கள் பிரபஞ்சத்திலேயே எல்லாம் வல்ல பேராற்றலாகத் திகழ்கிறது. இதனைத்தான் “காந்தம்” என்ற சொல்லால் வழங்கி வருகிறோம். இதுவே காந்தம் என்ற பேராற்றலின் பிறப்பிடமாகும்.

ஆங்கிலத்தில் இந்த காந்த நிலையை “Magnet” என்று சொல்லுகிறார்கள். “Mag” என்றால் மகா என்னும் கருத்தை விளக்கும். “Net” என்றால் பிரபஞ்சம் முழுவதும் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு, வலை போல் பின்னி ஒரே பொருளாக இறைத்துகளையும், அது தன்மாற்றம் பெற்ற எல்லாப் பொருட்களையும் இணைத்துக் கொண்டிருப்பதால் வலை என்று கூறப்படுகின்றது. Magnet என்பது பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தையும் வலைபோல் பின்னி, ஒன்றுபடுத்தி இயக்கிக் கொண்டிருப்பது என்பதுதான் பொருள். காந்தம் என்பது எங்கு உற்பத்தியாகிறது என்று விளங்கிக் கொண்டோம்.

அது தற்சுழல் விரைவுநிலையில் தனது நுண்ணுருவத்தை இழந்துவிட்டு பேராற்றல் பெற்ற அலைவடிவத்தில் பாய்மப் பொருளாகி எங்கும், எப்பொருளிலும் ஊடுருவி நிறைந்து சிறந்து விளங்குவதால் காந்தமில்லா இடமோ, பொருளோ பிரபஞ்சத்தில் இல்லவேயில்லை! எந்தப் பொருளை எடுத்தாலும் அணுக்களின் கூட்டாகக் காண்கிறோம். அணுவோ இறைத்துகளின் தொகுப்பு நிலையாகும். இறைத்துகளோ இறைநிலையின் நுண்பகுதி தானே.

இதனால் இறைநிலையின் இயக்க ஆற்றலான காந்தம் என்ற சிறப்பு நிலையில் அலைவடிவத்தில் இருந்தாலும், பிறப்பு நிலையில் இறைநிலையே ஆகும். இந்தக் காந்தத்தின் வியத்தகு சிறப்பியக்கம்தான் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்து உருவங்களும், சிறப்பு இயக்கங்களும் ஆகும்.

இறைநிலை இடமாக அமைந்து, அதன் துகள்கள் இறைநிலையின் ஆற்றல்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, இறைநிலையின் சூழ்ந்தழுத்தத்தினாலேயே தொடர்ந்து இயங்கக் கூடிய தற்சுழற்சி விரைவாக மாறியது. இப்பொழுது நாம் எந்தப் பொருளிலும், இடத்திலும் இறைநிலை, இறைத்துகள், காந்தமென்ற அலைநிலையான பாய்மப்பொருள் இவற்றைத் தனிதனியே உணர முடியாது. ஒரு நிலையை உணரும்போது மற்ற சிறப்புகள் அனைத்துமே அதில் அடங்கியிருக்கும்.

- வேதாத்திரி

2 கருத்துகள்:

  1. பாய்மம் இறைத்துகளை ஊடுருவுமா .
    வேதாத்திரியத்தில் இறைத்துகளின் கூட்டு விண் என்கிறார்.மற்றோர் இடத்தில் துகள் தன்னிலையிழந்து காந்தமானதே பாய்மம் என்கிறார்.துகள்நிலை கூடி விண்னா?பாய்மமென்ற காந்தம் கூடிவிண்னா?

    பதிலளிநீக்கு
  2. பாய்மம் இறைத்துகளை ஊடுருவுமா .
    வேதாத்திரியத்தில் இறைத்துகளின் கூட்டு விண் என்கிறார்.மற்றோர் இடத்தில் துகள் தன்னிலையிழந்து காந்தமானதே பாய்மம் என்கிறார்.துகள்நிலை கூடி விண்னா?பாய்மமென்ற காந்தம் கூடிவிண்னா?

    பதிலளிநீக்கு