Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 31 ஆகஸ்ட், 2013

மௌனம்




வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

மனம் அடங்கிய நிலையிலும் சினம் அடங்காத நிலை

கேள்வி : சினம் அடங்கிய நிலையிலும் மனம் அடங்கவில்லையே என்பதுபோல, மனம் அடங்கிய நிலையிலும் சினம் அடங்காத நிலைக்குச் சான்றுகள் பல உள்ளன. மனம் அடங்கிய துர்வாசருக்குச் சினம் அடங்காமல் போனது ஏன்?

மகரிஷி : மனிதனுக்குத் தன்முனைப்பு என்று ஒன்று இருக்கிறது. தன்முனைப்பிலே 'தான்' 'தனது' என்ற இரண்டு எழுச்சிகள் உண்டு. 'தான்' என்பது அதிகாரப்பற்று (aggressiveness). 'தனது' என்பது பொருள் பற்று (possessiveness). ஆகவே அந்த அதிகாரப் பற்று என்பது "தனக்கு மேலாக ஒருவர் திகழக் கூடாது, வளரக்கூடாது, உயரக்கூடாது" என்ற எண்ணத்தை உடையது. ஆகையினாலே ஒருவர் உயர்ந்துவிட்டால், ஒருவர் செழித்துவிட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அது அவருடைய நோய். உங்களுக்கு ஏன் அந்தக் கவலை ? அதை விட்டுவிடுங்கள். அந்த நோயை அவரே குணப்படுத்திக்கொள்ள வேண்டியதே தவிர அது நம்மை ஒன்றும் பாதிக்காது. அத்தகைய மனிதர் ஏதேனும் ஒரு பழிச்சொல் சொன்னார், தீங்கு செய்தார் என்றால் அவரை "மனதாரக் காலை, மாலை வாழ்த்துங்கள்". எல்லாம் சரியாகிவிடும். 


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 28 ஆகஸ்ட், 2013

நிஷ்காமிய கர்மம்


சமுதாயம் மனிதனை உருவாக்குகின்றது; பாதுகாக்கின்றது; எல்லா ஆற்றலைகளையும் அளிக்கின்றது. தனி மனிதன் அவன் பெற்ற ஆற்றல் மூலம் சமுதாயத்திற்குட்பட்டுள்ள கடனை, அதற்கு அவன் தன் ஆற்றலை அர்ப்பணித்துக் கொண்டு செய்வதன் மூலம் திருப்பி அளிக்க வேண்டும். இதுவே கடமையாகும். (கடன்-கடமை) பயன் கருதாத செயல் என்னும் பொருளில் 'நிஷ்காமிய கர்மம்' என்றும் அழைக்கப்படும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

உயிர் அறிவை உள்ளுணர்வாய்

எனது வாழ்க்கையில் 50 ஆண்டு காலம் நான் பொருள் துறையிலே கழித்தேன், பொருள் பெருக்கி அதனைச் செலவிட்டு அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்று முயன்று பார்த்தேன். முடியவில்லை. அடுத்து, நாம் ஏதேனும் அரசியலுக்கு உதவ முடியுமா என்று கட்டுரைகள் வாயிலாகவும், திட்டங்கள் வாயிலாகவும் உணர்த்தி வந்த போது ஏதோ ஒரு சிறிய அளவு பலன் தான் காண முடிந்ததே தவிர அது நிலைக்கவில்லை.

இறுதியாக ஆன்மீகத் துறையில் வந்த பிறகு தான் ஒரு உயிருக்கு உணர்வு ஊட்டினால் கூட அதிலே நிறைவு இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரு இனிமையான வாழ்வு வாழ்வதற்கு அவர்களுக்கு ஊக்கம் அளித்தால், அதிலே ஒரு நிறைவு இருக்கிறது. இவ்வாறாகத் தனிமனிதன், குடும்பம், சமுதாயம், உலகம், என்ற முறையிலே தனி மனிதனிடத்திலே அமைதி வேண்டும்; சமுதாயத்திலே அமைதி வேண்டும்; உலகத்திலே அமைதி வேண்டும்.

அந்த அளவிலே ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் உணர வேண்டும் என்றால், மனிதன் மனதை உணர வேண்டும்; மனதுக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய அறிவை உணர வேண்டும்; அறிவின் இருப்பிடமாக உள்ள உயிரை உணரவேண்டும். இதை உணர்வது ஒன்றும் சிரமமே இல்லை. உங்களுக்குள்ளாக, நீங்களாக இருந்து கொண்டு அதைத் திருப்பிச் சிந்தனை செய்து அதை அறிந்து கொள்ளும் போது இந்த மனம் இந்த முனையில் மனமாக இருக்கிறது. மற்றொரு முனையில் எல்லாம் வல்ல இறைவனாக இருக்கிறது என்பதைக் காணலாம். அது சுலபமே. அதற்கு ஒரு சிறு பயிற்சிதான் தேவை. அந்தப் பயிற்சியிலே ஆழ்ந்த சிந்தனை விளக்கம் தான் தேவை.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சனி, 24 ஆகஸ்ட், 2013

தெய்வீகத் திருநிதி

பிறப்புக்கும், வாழ்வுக்கும், இறப்புக்கும் இயக்க நிலையமாக உள்ளது கருமையம். காந்தச் சுழலின் மைய ஈர்ப்பு, உயிரியக்கமான சூக்கும உடலின் இயக்க மையம், விந்து நாதக் குழம்பின் இருப்பு மையம், மூன்றும் ஒன்றுகூடிய வியக்கத்தக்க ஓர் உயிரின மறைபொருள் புதையல் தான் எந்த உயிரினத்திற்கும் மையப்பகுதியில் அமைந்துள்ள கருமையம் ஆகும். இந்தக் கருமையம் தான் (Soul) ஆன்மா, சீவன், அகம், உள்ளம், உயிரினக் கருவூலம், நெஞ்சம் என்ற சொற்களால் வழங்கப் பெறுகின்றது.

கருமையத்தில் அடங்கியுள்ள ஆற்றலையும் அதன் மதிப்பையும் எவராலும் மொழியைக் கொண்டு உணர்த்தி விட முடியாது. உதாரணம் மனிதனுடைய கருமையத்தில், இறை நிலையின் பரிணாமம், இயல்பூக்கம் எனும் முறையான நிகழ்ச்சிகளால் இறைநிலையிலிருந்து தொடங்கி இன்று வரையில் நிகழ்ந்த அத்தனையும் தன்மை வாய்ந்த காந்த அலைத் திவலைகளாகச் சுருங்கி அமைந்துள்ளன. தக்க காலத்தில் தேவையாலும், மன இயக்க நிலையாலும், சூழ்நிலைகளாலும் கரு மையத்துள் சுருங்கியிருக்கும் அனைத்தும் ஒவ்வொன்றாக எண்ணங்களாகவும், செயல்களாகவும், உருவங்களாகவும் வெளிப்படும்.

இத்தகைய பேராற்றல் அமைந்த தெய்வீகத் திருவிளையாட்டின் சூட்சும அரங்கமே கருமையம் ஆகும். இத்தகைய கருமையத்தில், காலம், தூரம், பருமன், இயக்கம் என்ற நான்கு கணங்களுக்கும் எட்டாத இறை நிலையிலிருந்து, இன்று நாம் காணும் விரிந்த பேரியக்க மண்டலத்தில் நிகழும் கோடான கோடி இயக்கங்களையும் பிரதிபலிக்கும் காந்தக் கண்ணாடியாகவும் விளங்கும் தெய்வீகத் திருநிதியே கருமையம் ஆகும்.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உயிருக்கு உதவி செய்வது என்பது ஈகை,
உயிருக்கு ஊறு செய்யாமை என்பது ஒழுக்கம்".
.

"எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்."
.

"எண்ணத்தை எண்ணத்தால் ஆராய்ந்தால்
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் தோன்றும்;
எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்".
.

கருமையத் தூய்மை கவிகள் :
நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,
மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,
நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம்உட லுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்.
.

"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!".
.
 
 
 
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

புதன், 21 ஆகஸ்ட், 2013

உலக பொது சமயத்தின் உண்மை உணர்வு

1. எனது பிறப்பு, வளர்ப்பு, காப்பு இவற்றிற்கு கருணையுள்ள, கண்கண்ட கடவுளாகவும், காப்பாளராகவும், துணைவர்களாகவும் உள்ள எனது அன்னை, தந்தை, குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் என்ற ஐந்து பெரியவர்களையும் நன்றி மறவாமல் மதித்து வாழ்வேன்
.
2. பேரியக்க மண்டலம் முழுமையும் நீக்கமற நிறைந்து எல்லாப் பொருட்களிலும், உயிர்களிலும் முற்றறிவாக இயங்கி அருளாட்சி புரியும் மெய்ப்பொருள் எல்லாம் வல்லது, எங்கும் உள்ளது, எல்லாம் அறியும் ஆற்றலுடையது. என்னுள்ளும் எனதறிவின் உட்பொருளாய் உள்ளது என்பதை நம்புகிறேன், உணர்கிறேன். ஒத்துக்கொள்கிறேன்.

3. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நான் செய்யும் தொழில்களில் எனது நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருட்கள் அல்லது மக்கள். இவற்றிற்கு ஏற்ப இன்பமோ, துன்பமோ விளையும் உண்மையை, எல்லாம் வல்ல தெய்வமே அதன் பேரருள் நிலையிலிருந்து நீதியோடு வழங்குகிறது என்ற உண்மையை மதிக்கிறேன். எச்செயலையும் எனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், உடலுக்கும், உயிருக்கும், துன்பம் விளையாத முறையில் விழிப்போடு செயலாற்ற என்னால் இயன்றவரை அக்கறையோடு முயற்சிப்பேன். இதனையே இறைவழிபாடாகக் கொள்வேன்.

4. உணவு, உழைப்பு, ஓய்வு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து தொழில்களையும் அலட்சியம் செய்யாமல், மிகையாக அனுபவிக்காமல், முரணாக அனுபவிக்காமல் அளவோடு, முறையோடு செய்து உடல் நலம், மனநலம், பொருள் வளம், சமுதாய நலம் காப்பேன்.

5. அறிவின் நலம் காத்து அதனை மேன்மை நிலைக்குக் கொண்டுவர தெய்வ வழிபாடும், சமுதாய மக்களிடம் நட்புறவை இனிமையாக அமைத்துக் கொள்ள ஒழுக்கம், கடமை, ஈகை, என்ற மூன்றிணைப்பு அறநெறியும் மையக் கருத்துகளாகக் கொண்டவையே எல்லா மதங்களும் என்பதை உணர்ந்தேன். எல்லா மதங்களுக்கும் மதிப்பளித்து வாழ்வேன். எந்த உருவில், எந்த குணத்தில் தெய்வத்திற்கு உருகொடுத்து வணங்கினாலும் அவரவர் அவரறிவால் எடுக்கும் உருவம், குணம் என்பதையறிந்து எவ்வகை வழிபாடும் அறிவை வழிபடும்கருத்தே என்பதை உணர்ந்து கொண்டேன். எந்தவகை இறைவணக்கத்தையும் அலட்சியப்படுத்தாமல் மதித்து போற்றுவேன்
.
6. நான், குடும்பம், சுற்றம், சமுதாயம், உலகம் என்ற ஐந்து பிரிவிற்கும் ஒன்றால் ஒன்று கெடாமல் எனது கடமைகளை வழுவாமற் செய்வேன்.

7. குடும்பத்தில், சமுதாயத்தில், ஆட்சிமுறையில், உலக அரங்கில் நடைபெறும் குற்றங்கள், தவறுகள், பழிச்செயல்கள் இவற்றிற்கு எந்த ஒரு தனி மனிதனையும் பொறுப்பாக்கி அவர் மீது வெறுப்போ, பகையோ, அலட்சியமோ கொள்ளமாட்டேன். எனெனில் எந்தக் குற்றத்திற்கும், தவறுக்கும் நீண்டகால சமுதாயத்தில் நிலவி வந்த கருத்துக்கள் செயல்கள், சூழ்நிலைகளால் ஏற்பட்ட நிர்பந்தங்கள் இவற்றால் ஏற்பட்ட பதிவுகளும், கருத்தொடராக தொடர்ந்து வருவதும் இன்றுள்ள சமுதாய சூழ்நிலைகளும்தான் எல்லா பழிச்செயல்களுக்கும் காரணம் என்பதை அறிவேன். இன்றுள்ள மக்கள் மனம்தெளிந்து திருந்துவதற்கு உதவி செய்ய ஆன்மிக அறிவை வளர்ப்பதும், துன்பப்படும் மக்களுக்கு உதவி செய்வதும், வருங்கால சமுதாய அறிவுத் தெளிவோடு அறநெறி பின்பற்றி வாழவும், உலக நாடுகளுக்கிடையே அமைதி நிலவவும் என்னால் இயன்ற தொண்டுகளைச் செய்வேன்.

8. பரிணாம சிறப்புப்படி எல்லா அண்டங்களையும் உருவாக்கிக் காக்கும் இயற்கை உலகில் உயிர்களை உற்பத்தி செய்து வளர்க்கும் பொறுப்பினை பெண்ணினத்திடமே ஒப்புவித்துள்ள கருணை நிறைந்த அருட்பொறுப்பை உணர்ந்து பெண் குலத்திடம் எப்பொழுதும் உரிய மதிப்புடைய வனாக இருப்பேன்.

9. எனது வருமானத்தில் நூற்றுக்கு ஒன்று வீதம் ஒதுக்கி பிறர் நலத்திற்காகச் செலவிட்டு வருவேன்.

10. எனது ஆன்மா தூய்மைபெற, மேன்மை பெற அகத்தவம் எனும் அகநோக்குப் பயிற்சியைப் பின்பற்றி சிறப்படைவேன்.
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

இறைவணக்கம்

இறை என்பது தெய்வநிலையைக் குறிக்கும் ஒரு சிறப்புச் சொல்
தெய்வம் என்பது அரூபமான பேராதாலச் சக்தி. மாபெரும் பேரியக்க
மண்டல நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மூலமானதும் புலண்களைக்
கொண்டு வேகம், காலம், பருமன், தூரம் என்ற நான்கு அளவைகளாலும்
கணிக்க முடியாததும் அறிவு புலண்களின் மூலமாகத் தேடும்போது
இல்லையென்றும் தனது ஆறாவது நிலையின் உயர்விலே ஆராயும்போது
உண்டு என்றும் உணரக்கூடியதுமான உண்மைநிலை எதுவோ அதுவே
தெய்வம் என்று வழங்கப்படுகிறது.

வாழ்வு சிறப்படைய, வளம் பெற்று ஓங்க, உடலுக்கும் உள்ளத்திற்கும்
ஒரு நற்பயிற்சியே இறைவணக்கம். வயதிற்கும் அறிவு நிலைக்கும் ஒத்த
முறையில் இறைவணக்கம் தேர்ந்து நடத்தி வரவேண்டும். உடல்நலம்,
பொருள் வளமும் அறிவு இனிமையும் கெடாதவாறு சிக்கனமான முறையில்
இறைவனக்கம் அமையவேண்டும். உடல்நலமும் மனவளமும் பெறுவதற்கு
மனிதன் தன்னைப் பயிற்றுவித்துக் கொள்வதற்கே, தன்னை மேலும் மேலும்
உயர்த்திக் கொள்வதற்கே, இறைவணக்கம் உதவுகிறது என்பதை நன்கறிந்து
நினைவில் கொள்ளவேண்டும்.

இன்ப துன்ப உணர்ச்சிகளுக்கு அப்பால் நிற்கும் பரம்பொருளை மகிழ்விக்க
வேண்டுமென்று நினைப்பது அறயாமை. இறைவணக்கம் முடிந்த உடன்
வாழ்விற்கு வளமளிக்கும் சங்கற்பங்களை ஓதுவது சிறந்த பயனளிக்கும் முறை. உடல்நலம், அறிவு, செல்வம், ஒழுக்கம், அறம், கடமை, கீர்த்தி இவற்றில் மேன்மேலும் சிறப்படைவேன் என்று பலமுறை தானே உறுதி
கூறிக்கொள்வது மனிதன் வாழ்வைச் சிறப்பிக்க ஏற்ற உயர்ந்த பயிற்சி.

இறைவணக்கத்தின் மூலம் முழுப்பயன் பெறவேண்டுமெனில் மனிதன்
தன் சினம், கவலை, என்ற இருவித மனோஎழுச்சிகளையும் படிப்படியாக
குறைத்துப் பின் அடியுடன் போக்கிக் கொள்ளவேண்டும். ஆகவே இறைவணக்கத்தில், இயற்கைத் தத்துவ விளக்கத்தில் வாழ்வின் அனுபவத்தில் சிறந்த அறிஞரைத் துணைகொண்டு, இறைவணக்கம் தேர்ந்து
பயின்று ஒழுகி மேன்மையடையுங்கள்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

நான் - என்ற தத்துவமே நாம்

தண்ணீரே சமுத்திரம், ஆறு, ஏரி, குளம், குட்டை, மழை, மேகம் என்ற பல பெயர்களால் அழைக்கப்படுவது போல,

'நான் என்று சொல்லும் அறிவின் தத்துவமே - காந்த சக்தி அலை இயக்கமே - பல்வேறு உருவில், அதனதன் தன்மைக்கேற்ப இயக்கும், இயங்கும் சக்தியாகவும், உணரும் ஆற்றல் நிலையாகவும் இருக்கிறது.

ஆகையால், இந்த "நான்" என்ற தத்துவம் தான் - சக்திதான் - நாம் என்ற பலராக, அனேக கோடி சீவன்களாக, மனிதர்களாக, அறிவியக்கங்களாக இருக்கிறது.

உருவ அளவில் மனதுக்கு எல்லைகட்டிக் கொண்டு பல நாடுகளிலும் சிதறி வாழ்ந்து, தேசம், இனம், ஜாதி, மதம் என்னும் வேறுபாடுகளைக் கற்பித்துக் கொண்டு, அதனால் வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களையும் அனுபவித்துவிட்டோம். ஆழ்ந்து ஆராய்ந்த போது, அறிவின் தத்துவமாகிய ஆன்ம நிலையை அறிந்து விட்டோம். அந்நிலையில் அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்தோம். இந்த விரிந்த மனநிலையில் அனைவரும் வாழ வேண்டும்.





* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
'நான்' என்ற தத்துவமே நாம் :
--------------------------------------------
"நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்
நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி
ஒருவருக் கொருவர் இன, தேச, ஜாதி,
தான்-தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்தோம்.
ஆன்ம நிலையறிந்து ஆராய்ந்து கண்ட
ஆட்சிமுறை உலக சமாதானத் திட்டம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி



ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தேவைகளை குறைப்போம்

* மனிதன் முழுமை பெற வேண்டுமெனில் பரம்பொருளோடு ஒன்றிப் பிறவித் துன்பத்தை ஒழித்து விட முயற்சி செய்ய வேண்டும். இம்முயற்சியை அடையும் வழிமுறைகளுக்கு யோகம் என்று பெயர். யோகப்பயிற்சியை முறையாக மேற் கொள்பவனுக்கு ஞானம் உண்டாகும்.
* நமது மனத்திலும் வாழ்க்கையிலும் தவறு நேர்வதை தவிர்க்க முடியாது. தவறை உடனே திருத்திக் கொள்வது என்பதும் எளிதான செயல் அல்ல. முறையான பயிற்சியால் மட்டுமே மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும்.

* வாழ்வில் மனத்தூய்மை, ஒழுங்கான உணவுமுறை, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றை முறையாக கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

* தவறான எண்ணங்கள் மனதில் உருவாகும் போது தவிர்க்க முயற்சிக்க வேண்டும். அதற்கு மாற்றாக நல்ல எண்ணங்களை நாமே வலிந்து சிந்திக்க வேண்டும். அதன் போக்கில் மனதை போக விட்டால் தறி கெட்டு ஓடத் துவங்கி விடும்.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே சென்றால் சுகபோகங்களில் நாட்டம் வந்து விடும். அதற்காக பழிபாவம் செய்யவேண்டி வந்துவிடும். பிறவிச்சுழலிருந்து என்றுமே தப்பமுடியாமல் போய்விடும்.

--வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

மெய்ஞ்ஞான வாயில்

புருவமையத்தை "ஆக்கினைச் சக்கரம்" என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனத்தைக் குண்டலினியில் ஒடுக்கிப் பழக, உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும். உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்க்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்கு...ண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலை தான் 'மாயை' எனப்படும். மயக்க நிலையில் உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகளே, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்னும் அறுகுணங்களாகும்.

அறுகுண வயப்பட்டு மக்கள் செலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம். ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகிறது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது, தனது ஆற்றலை- அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக மாற்றி, அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது. தனது இயக்க

விளைவுதான் இன்பமும் தும்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவுபெற்றுத் தன ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.

தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும், தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டுச் சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவிற்குத் திறமை பெருகும். மெய்ஞ்ஞானம் என்ற அருட்கோயிளுக்குள் புகும் வாயில், ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப்பெற்ற குண்டலினி சக்தியின் இயக்கவிறைவு நாளுக்குநாள் கூடிக்கொண்டேயிருக்கும்; உடல் நலம், மன நலம், ஓங்கும்; முகம் அழகு பெரும்.


                                                                                                             -வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

மனம் ஒரு பொக்கிஷம்

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் விளைவுண்டு. அந்த விளைவிலிருந்து யாருமே தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமைதியும் இன்பமும் ஏற்படும். அறிவு வளர்ச்சிக்கும் வழி ஏற்படும். இன்றேல் அமைதி குன்றி வளர்ச்சி தடை...யுறும். அவரவர் செய்யும் தவறுகள் தான் மதவாதிகளால் பாபம் என்றும், சிந்தனையாளர்களால் தவறு என்று, அரசியல்வாதிகளால் குற்றம் என்று கூறப்படுகிறது. இந்த மூன்றுமே ஒரே பொருளைக் குறிப்பதுதான்.

நாம் ஒரு முறை ஒரு செயலை செய்துவிட்டால், அது நமது உடலுறுப்புக்களில் பதிந்து மீண்டும் அதையே செய்யத் தயாராகிவிடும். இந்தப் பதிவு, எண்ண அழுத்தமாக மூளையிலும் பதிந்துவிடுகிறது. அதுவுமின்றி, சந்ததித் தொடர்புக்கு காரணமாக உயிர்வித்திலும் அது பதிந்து விடும். ஆகவே தான், தீமையைத் தவிர்த்து நல்லதே செய்ய நாம் பழகிக் கொள்ள வேண்டியதிருக்கிறது இதற்கு தான் ஒழுக்கம் என்று பெயர். பிறர்க்கு எவ்வகையிலும் தீமை ஏற்படாதபடி எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு வாழ்வது தான் ஒழுக்க வாழ்வு ஆகும். மற்ற எல்லாம் இழுக்கான வாழ்வாகிய துன்பத்தையே தான் கொடுக்கும். இதனால் காரண காரிய விளைவு அறிந்து இன்பம் தரும் நற்செயல்களிலேயே ஒருவன் ஈடுபடவேண்டுவது அவசியமாகிறது.


                                                                                                                   -வேதாத்திரி மகரிஷி

புதன், 14 ஆகஸ்ட், 2013

செயலின் பிரிவுகள்:



உடலியக்கத்தால் இயற்கையாக எழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ள உணவு, உடை, வீடு, வாழ்க்கைத்துணை இவைகள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றன.
...
இந்தத் தேவைகளை தேட, பெற, வைத்திருக்க, அனுபோகிக்க பிறர்க்களித்து உதவ, ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு.

இயற்கையான இந்த உரிமையின் அடிப்படையில் மனிதனின் உடல் வலிவு, அறிவாற்றல் என்ற இருவகையும் பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தும் முறையைப் பொதுவாகச் 'செயல்' என்று சொல்லுகின்றோம்.

மனிதனுடைய செயல்கள் அதற்கு உரிய நோக்கங்களைக் கொண்டு பிரிக்கப்பட்டதில் அவை தொழில், கடமை, தியாகம், தொண்டு என நான்கு வகையாகிவிட்டன.

தன உடலின் இன்பம், பணம், பாசம் என்ற மூவகைக் குறிக்கோள்களைக் கொண்டு ஒருவர் புரியும் செயல் 'தொழில்' எனப்படும்.


தான் வாழ்வதற்காக உதவியுள்ள சமுதாயத்திற்கு பிரதி பலனாக ஒவ்வொருவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டியவை என்று வாழ்க்கை அனுபவத்தில் தேர்ந்த அறிஞர்களால் வரையறுத்துக் கூறப்பட்ட, உடல், குடும்பம், பந்து, ஊர், தேசம், உலகம் என்று அறுவகை நலன்களுக்காகவும் புரிய வேண்டிய செயல்கள் 'கடமை' எனப்படும்.

குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகவோ, ஒரு மனிதனுக்காகவோ, மனிதக்குழு ஒன்றிற்காகவோ, உணர்ச்சிவயப்பட்டுத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் செயல் 'தியாகம்' என்று சொல்லப்படும்.

இயற்கை நிலையினையும், எண்ணத்தின் நிலையினையும், இன்ப துன்ப இயல்பினையும் அறிந்த பேரறிவின் எல்லையில் நிலைத்து, தான் தனது என்று குறுகி நிற்கும் எல்லையைக் கடந்து தன்னை உலக மக்களின் வாழ்வின் நலத்திற்காகவே அர்ப்பணித்து, எண்ணம், சொல், செயல் என்ற மூன்று வித ஆற்றல்களைப் பயன்படுத்தும் பெரு நோக்கச் செயல் 'தொண்டு' என்று மிகவும் சிறப்பாகக் கருதப்படும்.


                                                                                                                    -வேதாத்திரி மகரிஷி.
 

அறிஞர்களின் அனுபவங்கள்

அறிஞர்கள், கவிஞர்கள், தொழில் நிபுணர்கள், இவர்களின் வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் எண்ணிறந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தேறுகின்றன.
...
உலக மக்களுக்கு அவர்களது அனுபவங்களை பேச்சாலும், எழுத்தாலும், கவியாலும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்கள். அவர்கள் அந்தத் துறையில் அந்தந்த நிகழ்ச்சியில் அந்தந்தச் சமயத்தில் தாங்கள் அடைந்த இன்பங்களையும், துன்பங்களையும் உலக மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

அவர்களின் இத்தகைய முயற்சியால் அவர்கள் அடைந்த இன்பத்தை ஒருவர் அறிந்து கொண்டது முதல் அதை நினைக்குந்தோறும் ஓரளவு இன்பமும், அதே இன்பத்தைத் தானும் வாழ்வில் பெற வேண்டும் என்ற முயற்சியும், அதைத் தொடர்ந்து, முயற்சிக்கேற்ற பயனையும் அடைய முடிகிறது.

அவர்கள் அடைத்த துன்பத்தை ஒருவர் அறிந்து கொள்வதனால் அது போன்ற துன்பம் அறிந்து கொள்வதனால் அது போன்ற துன்பம் வாழ்வில் தனக்கு ஏற்படாமல் விழிப்பாக இருப்பதற்கும் அப்படி ஏதேனும் சூழ்நிலை சந்தர்ப்ப நிர்பந்தங்களினால் ஏற்பட்டுவிட்டாலும் அதைச் சமாளிக்கவும், குறைத்துக் கொள்ளவும் ஏற்ற அளவில் திறமை, தகைமை, பொறுமை இவைகளை அவர்கள் பெற்று வருகிறார்கள்.

ஆகவே அறிஞர்களின், அனுபவசாலிகளின் - கருத்துக்களும், சரித்திரங்களும் அவற்றைக் கற்கும் எல்லோருக்கும் பலவிதத்திலும் நற்பயனையே தருகின்றன.


                                                                                                             -வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பேரியக்க மண்டலம்

தெய்வம், இறைநிலை, கடவுள், பரம்பொருள், பிரம்மம் எனும் சொற்கள் யாவும் பிரபஞ்சத்தின் மூலப்பொருளான ஒரே தத்துவத்தைக் குறிப்பன ஆகும். நுண்ணணு முதலாக அவற்றின் கூட்டுத் தோற்றங்கள் அனைத்தையும், ஒருசேரக் குறிக்கும் வார்த்தைதான் பேரியக்க மண்டலம். இந்தப் பெருமண்டலத்தின் தோற்றங்களையும் ஆற்றல்களையும் புலன்களால் தனித்தனியே எல்லை கட்டியும், அவற்றுக்குத் தனித்தனியே பெயர் வைத்தும் அழைப்பது மனிதனிடம் அமைந்துள்ள ஆறாவது அறிவின் சிறப்பு ஆகும். மனம் என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்துணர்வால் - அடித்தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் என்று பல பெயர்களால் அழைக்கிறோம். இவையெல்லாம் மரம் என்ற ஒரே தோற்றத்தின் உறுப்புகளேயாகும். அவையனைத்தையும் சேர்த்து முழுமையாக ஒரு சொல்லில் கூறும்போது மரம் என்று கூறுகிறோம். இதே போன்று அணுக்கள், பஞ்சபூதம், கோள்கள், சூரியன், உலகம், உயிர்கள் என்று கூறுவதெல்லாம் ஒரே ஒரு இறைநிலையின் பரிணாமத்தால் மலர்ந்துள்ள பேரியக்க மண்டலத்தின் கூறுகளேயாகும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 10 ஆகஸ்ட், 2013

இயற்கை என்ற சொல்லின் பெருமதிப்பு

1) ஆதியெனும் இருப்பு நிலை [சுத்தவெளி]

... 2) இருப்பு நிலையின் தன்னடக்க ஆற்றலால் தானே துண்டுபட்டு நுண்ணிய அளவில் தற்சுழல் அலையாக எழுச்சி பெற்று இயங்கும் பரமாணு.

3) பரமாணுவின் சுழற்சி விரைவால் எழும் விரிவலை இருப்பு நிலையான சுத்தவெளியோடு இணைவதால் ஏற்படும் வான் காந்தம்.

4) பரமாணுக்களின் கூட்டு இயக்கத்தால் உண்டாகிற நெருப்பு, நீர், நிலம் ஆகிய நான்கு நிலைகளோடு பரமாணு நிலையும் சேர்க்க விளங்கி நிற்கும் ஐந்து பௌதீகப் பிரிவுகள் [பஞ்ச பூதங்கள்]

5) ஓரறிவு உயிரின தாவரங்கள் முதல் ஆறறிவுடைய மனிதன் வரையில் உள்ள உயிரினங்கள் இவை அனைத்தையும் சேர்த்து, ஒன்றுபடுத்திக் கூறப்படும் சொல் தான் இயற்கை எனும் பெரு மதிப்புடைய சொல்.

இயற்கையின் ஆதி நிலையான இருப்பு தனக்குள் அடங்கிய ஆற்றலால் மலர்ச்சி பெற்று, வெவ்வேறாகக் காட்சியாகும் பரிணாம சரித்திரத்தில் ஒவ்வொரு நிலையையும் மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் குறிப்புகளே எந்த மொழியிலும் அடங்கிய சொற்களாகும்.

அளவிட முடியாத ஆற்றலுடைய இப்பேரியக்கப் பெருங்களமான இயற்கையைப் பகுத்துப் பகுத்தும் தொகுத்துத் தொகுத்தும் உணரக் கூடிய சிற்றறிவு, பேரறிவு, முற்றறிவு, என்ற மூன்று நிலைகளையும் அறிவின் சிறப்பாகப் பெற்றவன் மனிதன். இவ்வளவு சிறப்பையும் இயற்கையாலும், தன் செயலாற்றலாலும், சிந்தனை உயர்வாலும் பெற்ற மனிதன் ஏன் வாழ்வில் துன்பங்களையும், சிக்கல்களையும் அனுபவிக்க வேண்டும்?

இந்தச் சிந்தனையின் மூலம் மனித ஆற்றலையும், பிறவியின் நோக்கத்தையும் உணர்ந்து வேண்டிய இடத்தில், காலத்தில், அளவில் தனது ஆற்றல்களைப் பெருக்கிக் கொண்டு, பயன்படுத்திச் சிறப்பாக வாழ வழி காண வேண்டும். இதற்குத் தவமும், அறமுமே உதவும்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"பேரியக்க மண்டலத்தைத் தத்துவங்கள்

பத்தாக விளங்கிக் கொள்வோம்.

பெரியசுமை மனதிலிருந் திறங்கிவிடும்

மனம்அறிவாம் சிவமு மாகும்.

ஓரியக்க மற்றநிலை வெட்டவெளி.

இருப்பதுவே; ஆதி யாகும்.

உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும்

விண்ணாகும். அதிலெ ழுந்த

நேரியக்க விரிவுஅலை நெடுவெளியில்

கலப்புற வான் காந்த மாச்சு.

நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம் ஒலி

ஒளி சுவையும் மணம் மனம் ஆம்.

சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை

உள்ளுணர்ந்தால் அது மெய்ஞ் ஞானம்.

சிந்திப்போம், உணர்ந்திடுவோம், சேர்ந்திருப்போம்

இறைநிலையோ டென்றும் எங்கும்! ".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி 

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

அறிவின் முழுமை

"அறிவு" என்பது உண்டா, இல்லையா? இல்லை என்று யாருமே சொல்ல முடியாது. ஆனால் அறிவு எப்படி இருக்கிறது? எந்த பொருளுக்காகிலும் எந்த விஞ்ஞானத்துக்காகிலும் எந்த கருவிக்காகிலும் அடங்குமா? புலன்களால் காண முடியுமா? முடியாது. அப்படியானால் அது என்ன? அரூபம். முழு முதற் பொருளாகிய ஆதி நிலை; வெட்டவெளி; சிவம் என்று சொல்லக் கூடியது அரூபமா, ரூபமா? அதுவும் அரூபம் தான். அரூபத்தில் இரண்டு இருக்குமா? இந்த கேள்விதான் உண்மையை உணர்த்தக் கூடிய கேள்வி.
...
ரூபமாக இருந்தால் எல்லை (Volume) கட்டிவிட முடியும். எண்ணிக்கைக்கு உட்படுத்திவிட முடியும். (It would be circumscribed and subject to the numbering process). ஆனால் அரூபம் இரண்டு இருக்க முடியாதே ! இரண்டு பூஜ்யம் (zero) என்னவாகும்? ஒரு சைபர்தானல்லவா? அதுபோல அறிவும் பிரம்மமும் ஒன்றுதான். அந்த பிரம்மம் என்ற நிலையிலே, முழு முதற் பொருளாக, சுத்த வெளியாக, இந்த பிரபஞ்சத்தையும் தாண்டி அப்பாலும் சூழ்ந்து உள்ளது. அதுவே அணுவாகி இயங்கிப் பிரபஞ்சமாக இருந்து கொண்டிருக்கிறது; அந்த பிரபஞ்சத்தில், ஒவ்வொரு பொருளிலும் தன்மையிலும் இருந்து கொண்டு உயிர்களில் இவைகளையெல்லாம் உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றலாகவும் இருக்கிறது. ஒரே ஒரு பொருள்; பல இயக்கங்கள். இந்த உண்மையை மனிதன் உணரும்போது தான் ஆறாவது அறிவு முழுமை பெறுகிறது.



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அணுவாயும் தனித்தனியே இயங்கிக் கொண்டு
ஆறாகவும் காட்சியளிக்கும் நீர்போல்
அணுவாயும் கூட்டுறவாய்க் காட்சியாகும்
அகண்ட பேரண்டத்தில் தோற்றமெல்லாம்
அணு நிலையை பருஉருவில் உணரவல்ல
அறிவு தான் உயிருணர்வாம் அதற்கு மேலும்
அணுவுக்கு ஆதிநிலை பிரம்மம் என்று
ஆழ்ந்துணர்ந்த அறிவே மெய்யுணர்வு ஆகும்".
.
அகத்தவத்தின் பெருமை :
--------------------------------------
"உயிருணர்வே ஆன்மாக்கள்
உய்யவழி காட்டும்.
உள்நாடி அமைதிபெற
உண்மை தெளிவாகும்."
.
"இருபுருவ மையத்தில் இருள் நீக்கி அருள் விளக்கும்
ஒருவாசல் உண்டதுவே உயிர் நிலையை உற்றுணரும்
திருவாசல் உயிர் அறிவாய் தெய்வநிலை எய்தும் வழி
கருவாசலும் ஞானக்கண் என்பதும் இதுவே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம்

சிக்கனம் என்பது முதலில் வைத்திருக்கிறேன். சிந்தனையை அதற்கு அடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே, இந்த முறையிலே அந்தச் சிக்கனம், சிந்தனை, சிறந்த பண்பு, சீர்த்திருத்தமுடன் வாழ்வு, துணிவு இவை வேண்டும். அப்படி வேண்டுமானால் குடும்பத்தில் ஒருவர் மட்டும் சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் என்று இருந்தால் போதுமா? போதாது. இதை உணர்ந்து ஒத்துக் கொள்ளக் கூடிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் குடும்பத்திலே அமைதி இருக்கும், சீர்திருத்தம் பரவ முடியும், சிக்கனம் நிலைக்க முடியும், நலம் பெற முடியும். எனவே, அந்த முறையிலே சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் இவை எல்லாம் குடும்பத்தில் நிலவ வேண்டுமானால், அந்தச் சிந்தனையாற்றல் பெருகுவதற்கு மனவளம் தான் வேண்டும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 "மனிதர்கள், பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பத்திற்கு அடிமையாகி இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பேராசை கொண்டு வாழும் நிலையால் தான் சீர்கேடுகளும் ஏற்படுகின்றன".
.
"இறைநிலை நோக்கிய சிந்தனைக்கு நேரம் ஒதுக்கிக்கொண்டு பயிற்சி செய்வதும், தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுவதைப் பொருத்தே அறிவின் முழுமை கிட்டும்".
.
"மனம் ஒடுங்கி இறைநிலை நின்று, அகம்
தூய்மையான நிலையில் செயல்களைச் செய்வதற்கு
மனதிற்கு வேறு இடையூறுகள் இருக்கக்கூடாது".
.
நல்லுரை :
"சிக்கனமும் சிந்தனையும் சிறந்த பண்பும்
சீர்திருத்தமுடன் வாழும் துணிவும் கொண்டே
எக்கணமும் இருவருமே பிறர் உள்ளத்தில்
எழுகின்ற உணர்ச்சிகளைக் கூர்ந்துணர்ந்து
அக்கணத்தின் சூழ்நிலையைப் பயனைப் பெற்றே
ஆராய்ந்து எதிர்விளைவைக் கணித்துக் கொண்டு
மிக்க நலமுள வழியே செயல்களாற்றி
மேலான அறவழியில் வாழ வேண்டும்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


சனி, 3 ஆகஸ்ட், 2013

நடிப்புச் சினம்

"எந்தச் சந்தர்ப்பத்திலும் சினம் நன்மை விளைவிக்காது என்றால் அடம் பிடிக்கும் குழந்தையையும், நல்லவர்களையும் ஏமாற்றும் கபட மனம் படைத்த வேலையாளையும் எப்படித் திருத்துவது? கோபத்தைக் காட்டினால் தானே அவர்கள் ஒழுங்குக்கு வருகிறார்கள்?", என்ற கேள்விகள் எழலாம். சினத்தைப் பயன்படுத்தாவிட்டால் நற்பயன் விளையவே விளையாது என்று காணும் இடத்தில் சினம் தேவைதான். ஆனால், இந்தச் சினமானது யார்மீது செலுத்தப்படுகிறதோ, அவர்களுக்கு மட்டும் தான் அது சினமாகத் தோன்ற வேண்டும். மற்றபடி அது நமக்குச் சினமாகவே இருக்கக் கூடாது. சினம் உதட்டில் இருக்கலாம், உள்ளத்தில் இருக்கக் கூடாது. சினம் வந்தது போல் வேண்டிய அளவு, நடிக்கலாம். ஆவேசத்தை வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால், அது போலியாக இருக்க வேண்டும். மனம் மட்டும் நீர்த்தளம் போல் சமமாகச் சலனமற்று இருக்கட்டும். அது எப்படிச் சாத்தியம் என்றால் சினிமாவில் பார்க்கிறோமே, வில்லனுக்குக் கதாநாயகன் மேல் என்ன கோபம் வருகிறது? அது உண்மையான கோபமா? உண்மையானது என்றால், கதாநாயகன் அல்லவா இறந்து போவான்? நம்மால் நடிக்க இயலாமல் இருக்கலாம். ஆனால், உண்மைச் சினத்தின் அபாயத்திலிருந்து தப்ப, நடிக்கக் கற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உள்ளுணர்வின் நிலைகள் :

"அறிவதனைக் கருவினிலே இணைத்துத் தவம் ஆற்ற
ஐம்புலன்கள் அமைதி பெறும், அறுகுணமும் சீராம்.
அறிவு தன் விழிப்புநிலை பிறழாத தெளிவில்
ஐந்து பெரும் பழிச்செயல்கள் விளைய வழியேது;
அறிவு உயிரில் அடங்கி அந்நிலையில் மேலும்
ஆழ்ந்து ஒடுங்கித் துரியம் நிற்க முன் வினைகள்போமே,
அறிவு துரியாதீத நிலை நிற்க நிற்க
ஆதியாம் மெய்ப்பொருளாம், அறும் பிறவித் தொடரே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ராசி

கேள்வி : ஒரு சில ராசிக்காரர்களுக்குத் தான் ஆழ்நிலை தியானம் கைகூடி வருகிறது என்று கூறுகிறார்களே? உண்மையா? அப்படியென்றால் தியானத்திற்கும் இராசிக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா? எல்லா ராசிக்காரர்களும் தியானம் செய்யலாமா? ஒரு சில இராசிக்காரர்கள்தான் தியானம் செய்ய வேண்டுமென்றால் எந்தெந்த ராசிக்காரர்கள் தியானம் செய்யலாம்?

மகரிஷி : எந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் மனம் என்பது உண்டு. உயிர் என்பது உண்டு. இறைவன் என்பது உண்டு. ஆகையினால் எல்லோரும் தியானம் செய்யலாம். அதனுடைய உயர்வைப் பெறலாம். செய்தால் செயலுக்கு விளைவு உண்டு. அந்தச் செயலுக்கு விளைவு என்பதைத் தெரிந்து கொண்டோமானால் யார் எந்த முயற்சி எந்த அளவில் செய்கிறார்களோ அதற்குத் தகுந்த பலன் கட்டாயம் உண்டு. அதற்கு ராசி வேண்டியதேயில்லை. அதற்கு மேல் ராசி சரியாக அமைந்து விடும்.