Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

நட்பு

நட்பு

 1. மனித வாழ்க்கையில் விலைமதிக்க ஒண்ணாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் உறுதுணையாகி, சுக துக்கங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பான்மைதான் நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.

2.பொருளாதாரத்தையும் ஒழுக்கத்தையும் குலைக்கும் நோக்கத்தோடு ஒருவர் மற்றொருவரோடு நட்புக் கொள்ள இடமிருக்கின்றது. சமுதாயத்தில் இத்தகைய நட்புதான் அதிகமாக வளர்ந்திருக்கின்றது. இத்தகைய நட்பு வளர வளர அதனூடே தொக்கி நிற்கும் ஆபத்தும் வளர்ந்துகொண்டே வரும். ஆகவே இத்தகைய நட்பை ஆரம்ப காலத்திலேயே உணர்த்து முறித்து விடுவது நலம்.

3. ஒரு நீதிபதி, குற்றம் சுமர்த்தப்பட்டுத் தன் எதரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாகவும் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தே நீதி விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளிதான் என்று கொடுக்கும் தீர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அவசியமானால்தான் அளிக்கிறார். அதுவரையில் அந்தத் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அதே போன்று ஒழுங்கீனம், பொருள் தேவை மிகுந்துள்ள இக்காலத்தில், ஒருவர் தன்னோடு நட்பு கொள்ள வந்தால் அவர் ஏன் சுயநலவாதியாக, சுரண்டி வாழ்பவராக இருக்கக்கூடாது என்ற கருத்தை முதலில் உருவாக்கி மனத்தில் வைத்துக்கொண்டே அவரோடு நட்புக் கொண்டு அவர் நடத்தையைப் பற்றி ஆராய வேண்டும். சந்தர்ப்பங்கள்தான் மனித உள்ளதை உரைபோடும் கல். ஆகவே உறவாடுபவர் உள்நோக்கம் சீக்கிரம் தெளிவுபடும். அதன் பிறகே அவர் குற்றமற்றவர், நட்புக்கு ஒத்தவர் என்ற தீர்மானத்திற்கு வரவேண்டும். நீதிபதி நிரபராதி என்ற முடிவை முன்வைத்து குற்றவாளி என்ற முடிவைப் பின்கொள்ளுகின்றார். ஆனால் நட்பை ஆராய்வோர் முதலில் கலங்கமுடையோன் என்ற கருத்தை வைத்துச் சோதனைக்குப் பின்னரே களங்கமற்றவன், நண்பன் என்ற கருத்தை முடிவாகக் கொள்ள வேண்டும்.

4. நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு - சீடன், கணவன் - மனைவி, ஆசிரியர் - மாணவன், எசமான் - பணியாள், பொருட்களை விற்பவர் - வாங்குவோர், துணைவர்கள் ஆகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம். தேவை, பழக்கம், அறிவின் வளர்ச்சி என்ற மூன்றாலும் ஒவ்வொருவரும் வேறுபட்டிருப்பதனால் நட்பு என்றும் நிரந்தரம் என்று கொள்ள முடியாது. அது நீடிக்க இருக்கும் வாய்ப்பை விட குலைந்துபோக இருக்கும் வாய்ப்புத்தான் அதிகம்.

5. சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு அத்தகைய நண்பர்கள் பால் கொண்ட நம்பிக்கை மயக்கத்தில் எத்துணையோ விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. பொருட்கள், பதவி, மனைவி, மக்கள், கெளரவம் இவற்றை துரோகிகள் நட்பினால் இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்க்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள் தான் கொஞ்சமா ?

6. எதிரிகளால் ஏற்படவிருக்கும் கெடுதல்களைப் புரிந்து கொள்ள முடியும்; முன் ஏற்பாடோடும் இருக்கலாம். நண்பர்கள் என்ற முத்திரையில் உலாவும் நயவஞ்சகர்கள் அடுத்த நிமிடத்தில் என்ன செய்வார்கள் என்று கூடப் புரிந்து கொள்ள முடியாது. இதற்கு உலக சரித்திரம் சான்று கூறுகின்றது.

7. எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையேதான் அது வலுவுள்ளதாக இருக்கும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் குறுக்கிட்டால் - இணைந்தால் - நட்புக்கு எவ்விதத்திலேனும் ஊறு உண்டாகிவிடும்.

8. நல்ல நட்பு கிடைக்காவிட்டாலும் சரி, ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.

9. நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள சமுதாயத்தில், அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம்பெற்றோர் எண்ணிகையை விட வாழ்வில் ஏமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.

10. அறிவோடும் விழிபோடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, ஆகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ ஆற்றலையோ உதவியும் பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத - ஏமாற்றமளிக்காத - உயர்முறையாகும்.

+ வேதாத்திரி மகரிஷி