Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 24 அக்டோபர், 2015

தெய்வீகப் புதையல்

 

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப் பெற்றுக் கொள்கிறது. அதைப் போலவே, ஒவ்வொரு தாவரத்தினுடைய விதையிலும், அந்தத் தாவரத்தின் எல்லாத் தன்மைகளும், குணங்களும் பதிவாகி அந்த விதையானது செடியாக வளரும் போது அந்தக் குணங்கள் ஒவ்வொன்றாகப் பிரதிபலிக்கின்றன.

ஆகையால் தான், நான் கருமையத்தை மனித இனத்துக்குக் கிடைத்த தெய்வீகப் புதையல் என்று சொல்கிறேன். அந்தக் கருமையம் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலினுடைய நீதிமன்றம் என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், அதே கருமையம் தான் ஒருவரது தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உற்பத்திக் கூடமாகவும், கருத்தொடராக வந்த பதிவுகளுக்கெல்லாம் களஞ்சியமாகவும் விளங்குகிறது.

ஒவ்வொருவரும் கருமையத்தின் பெருமையைத் தெரிந்து கொள்வதோடு, அதை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருமையந்தான் 'ஆன்மா' எனப்படுகின்றது. கருமையத்தின் தன்மைகள் தான் ஒரு சீவனின் முற்பிறவிகள் பலவற்றுக்கும் பின்பிறவிகள் பலவற்றுக்கும் கருத்தொடர் விளைவாகத் தொடர்புற்றிருக்கின்றது.

வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவில் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

சகஜ நிட்டை:
"கருதவத்தில் ஆரம்பச் சாதகர்கள்
கரும ஞானக்கருவிகளை இயக்கும் போதும்
புருவமத்தி நினைவோடு இருத்தல் வேண்டும்
புலன்கள் தமை இம்முறையில் பழக்கி விட்டால்
அருவநிலை பூரணத்தால் நான் ஒன்றென்றும்
அனேக உருவங்களாய் நான் பலவே என்றும்
ஒருமை தத்துவம் உணரும் ஆற்றலோடு
உடலில் சுழல்கின்ற இரத்தம் சுத்தமாகும்".
.
உலகிணைந்த கல்விமுறை வேண்டும்;-
"கருத்தொடராய் வந்த வினைப்பதிவுகளின் வலுவைக்
கணிக்காமல் மதிக்காமல் ஏற்ற நல்லவினையால்
திருத்திடவோ சீரமைத்தோ உய்ய நினையாமல்
திரும்பவும் அப்பழைய வினைவழி நின்றேவாழ்ந்தால்
வருந்துவதும் வருத்துவதும் அன்றிவளம் ஏது?
வாழ்வுள்லோர் அனைவரும் இவ்வுண்மையை உணர்வோம்
பெருத்துவரும் பழிச்செயல்கள் மாறி உலகுய்ய
பேருலகம் இணைந்த ஆட்சி கல்வி இவை வேண்டும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 23 அக்டோபர், 2015

பொருளும், மதிப்பும்

 

நம்மிடம் 10ரூபாய் நோட்டு ஒன்றும், 100 ரூபாய் நோட்டு ஒன்றும் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இரண்டுமே காகிதம் தான். ஆனால், அதற்கு மதிப்பு என்று ஒன்று உள்ளது. அதே போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அந்தப் பொருள் நமக்கு எந்த அளவுக்குத் தேவை என்பதைப் பொறுத்தே அந்த மதிப்பும் அமையும். அந்தப் பொருள் யாரால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று நினைக்கும் போது எண்ணிறந்த மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது என்கிற போது அதற்கு மேலும் மதிப்பு உயருகிறது. பொருளினால் மதிப்பே தவிர எனது, என்னுடையது என்பதினாலே மதிப்பு உயருவதில்லை.

ஆகவே, இந்தப் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பெற வேண்டுமானால் தவம், தற்சோதனை இந்த இரண்டும் அவசியம் வேண்டும். அந்தத் தவத்தைப் பெற்ற பாக்கியசாலிகள் நீங்கள். உங்களுடைய உள்ளம் உண்மையிலேயே மகிழ்ச்சியடையத் தான் செய்யும். குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என்று எண்ண வேண்டாம். அது உங்களுடைய வினையின் பதிவு தான். நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக, வினையின் பயனாக நல்லதைப் பெற வேண்டும், அடைய வேண்டும், முழு முதற் பொருளை அடைய வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க, ஓங்க உங்களது மனத்தின் ஊடே உள்ள அந்தச் சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 22 அக்டோபர், 2015

வாழ்க்கைத் தத்துவம்



வாழ்க்கையை விளங்கிக் கொண்டு, காரணத்தையும் உணர்ந்து கொண்டு நடத்தினால் அது வெள்ளத்தில் படகு விடுவதை ஒக்கும். மாறாக அவ்விளக்கம் இல்லாமல் நடத்தினால் அது வெள்ளத்தில் அகப்பட்ட துரும்பின் நிலையேயாகும்....

வாழ்க்கையோ, இயற்கை, சமுதாயம், தான் என்ற மூன்றின் இணைப்பில் நடைபெறுகிறது. இவற்றில் சமுதாயம் என்ற தத்துவத்தை ஆராய்வதே நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள வாழ்க்கைத் தத்துவ ஆராய்ச்சியாகும்.

வாழ்க்கை வெற்றிமிக்கதாக அமைய வேண்டுமாயின், நாம் இயற்கையையும், சமுதாயத்தையும் உணர்ந்து, மதித்து வாழ வேண்டும். அதோடு எந்தக் காரியத்துக்காக இந்தப் பிறவியை எடுத்து வந்தோமோ, அந்த நோக்கத்திற்கு ஒத்ததாக அதாவது பிறவித் தொடரை முடித்துக் கொண்டு வீடுபேறு எய்தவேண்டும் என்ற அந்த உயரிய நோக்கத்திற்கு ஒத்ததாக வாழும்முறை அமைய வேண்டும். அப்போது தான் துன்பத்தைத் தோற்றுவித்துக் கொள்ளாமலும் வாழலாம். தவறுதலாக நாம் தோற்றுவித்துக் கொள்ளும் துன்பத்திலிருந்தும் மீண்டு கொள்ளலாம். பிறரால் தோன்றக்கூடிய துன்பங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம். எனவே வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றிய தெளிவால் விளக்கம் பெற்று அதன்படியே வாழ்ந்து வரவேண்டும்.




 "வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்
ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்
கோழை கயவர் கொலைஞர் தடியர்கள்
ஏழை, நோயுற்றோர் எங்குமே சாட்சியாம்".
.
ஆசிரியர்:
"வாழ வழிகாட்டிப் பயிற்சியூட்டி
வாழவைக்கும் சிறந்த செயல் கல்வியாகும்.
வாழ்வினையே கல்வி போதனைக்கே நல்கி
வாழும் உயர்நிலை பெற்றோர் ஆசான் ஆவார்".
.
"விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்
விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;
மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்
மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 21 அக்டோபர், 2015

தெய்வீக நீதி

 அறிவை வைத்துக் கொண்டு ஒருவர், இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இயக்கத்தில் உள்ள ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து அப்படி ஆராய்வதன் மூலமாக வலி, நோய்கள், பிணக்குகள், வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்து, அமைதியோடும், பேரின்பத்தோடும் வாழக் கூடிய உயர் வாழ்க்கையைப் பெற முடியும். உலகத்தில் உள்ள சடப் பொருள்களும் சரி, உயிரினங்களும் சரி, எதுவானாலும் அவற்றோடு தொடர்பு கொள்ளுகிற போது ஒரு இணக்கமான, அளவு முறைக்கு உட்பட்ட வகையில் விழிப்பு நிலையோடு செயல்பட முடியும். பிரபஞ்சத்தில் உள்ள எதுவானாலும், உயிரினமானாலும் அல்லது வேறு இரசாயன கூட்டுப் பொருளானாலும், அது பரிணாம வளர்ச்சி நியதிப்படி, ஆதிநிலையிலிருந்து தற்போதைய நிலை வரை தொடர்ந்து ஜீவகாந்தத் தன்மாற்றத்தின் குண இயல்புகளோடு தான் அமைந்திருக்கிறது. எந்த ஒரு உயிரினத்துடனோ அல்லது சடப் பொருளுடனோ தொடர்பு கொள்ளும்போது ஒருவர் உருவம், நிறம், குணமாக அதனதன் தன்மையை அடைந்து தன்னுடைய சீவகாந்தத்தின் தன்மாற்றத்தையே எண்ணமாகவும் சொல்லாகவும் செயலாகவும் செலவிடுகிறார். அவருக்கும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளுக்கும் இடையே நடைபெறுகிற அலை இயக்கம் மோதுதல், பிரதிபலித்தல் என்கிற தன்மைகளோடு, அவரையும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளையும் ஒருவிதமான பாதிப்புக்கு உள்ளாக்கி அதற்கேற்ற விளைவுகளைத் தருகிறது. இந்த விளைவுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும், தொடர்பு கொள்ளுகிறவருடைய இயற்கையான தன்மையையோ அல்லது தொடர்பு கொள்ளப்படுகிற பொருள் அல்லது நபரின் இயற்கையான தன்மையையோ பாதிக்கக் கூடாது. அதாவது எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும் புலன் மயக்கில் அதனோடு சிக்கிக் கொள்ளக்கூடாது. ஆன்மீக அறிவு பெற்ற ஒருவர் இதைத் தெய்வநீதியாகவும் வாழ்க்கை ஒழுக்கமாகவும் கொள்ள வேண்டும்.
 

அறிவின் அக நோக்குப் பயணம் :
"ஆன்மிகத் துறையென்ற அகல வழிப்பாதையிலே
அடிவைத்து மென்மேலும் முன்னேறிப் போகுங்கால்
அறிவுபெறும் அனுபவங்கள் வியப்பாகும், இனிமையாம்
ஆன்மஒளி சுடர்விட்டு உள்ளுணர்வுப் பேறாகும்.
.
ஊன் உருவமான உடல் ஊர்தியென்றும் ஊடே
உயிர் என்ற சூக்குமமே "நான்" என்ற உணர்வு வரும்,
ஒடுங்க ஒடுங்கக் காணும் உண்மையோ அறிவதுவே
உயிரிலிருந்தோங்கி யெழுந்துடல் உலகம் வெளிவிரியும்.
.
"நான்" அதுவே இருப்புநிலை மெய்ப்பொருள் தெய்வமெனும்
நன்முடிவு விளக்கமாம், அந்த முழுமுதற் பொருளே
நல்ல ஒழுங்காற்றலாய் நல்லுணர்வாய் அறிவறியும்
நல் ஊற்றாய்த் திருவருளாய் நல்லின்ப வெள்ளமாய்.
.
தேன்பொழியும் பேரின்பம் திகட்டாது சலிக்காது
திருத்தங்கள் எண்ணம் சொல் செயல்களிலே மலர்ந்துவரும்
செருக்கொழிந்து தான் அடங்கித் தெய்வநிலை எங்கெதிலும்
திருவருளின் காட்சியாம் திரும்புங்கள் உட்புறமாய்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

உன்னுள் நான்; என்னுள் நீ

ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் ஒரு சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களாலான பருப்பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது.

இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை.

வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.

____________________________________
"இயற்கை விதியறிந்து ஏற்று மதித்து ஆற்றும்
முயற்சி வெற்றி பெற முழு அமைதி என்றும் இன்பம்".
.
மனித மாண்பு :
"மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்
மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துறைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளக்கலையிதனைப் பரப்பி நலம் காண்போம்".
.
"இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
இதன்திணிவு மடிப்புவிழச் சுழலும்நுண் விண்ணாம்
நிறைவெளியில் விண்சுழல நெருக்குகின்ற உரசல்
நிலைவெளியில் எழுப்புகின்ற நேர்அலைகள் காந்தமாம்
மறைபொருளாம் காந்தம் தன்மாத்திரைகள் ஐவகை
மலைக்காதீர் விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்
முறையாய்அக் காந்தஅலை மனமாம்உயிர் உடல்களில்
மதிஉயர்ந்திவ் வுண்மைபெற மா பிரம்ம ஞானமாம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 19 அக்டோபர், 2015

கருவில் திருவுடையார் :

ஆத்மதாகம் கொண்ட மனிதன் இந்த நினைப்பிலே உருகி நற்கும்போது, அந்த நினைப்பானது குருவை அவன் முன் கொண்டு வரும். குரு வருவதற்கு வேறு மார்க்கமேதும் கிடையாது.
.
ஓர் ஏற்புத் தன்மை இருந்தால் குருதானே இங்கே வருவார். எனவே, குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. தன்னை அறிந்து கொள்ள வேண்டும், என்ற ஆர்வம் உயரட்டும். தானாகவே அவனுடைய எண்ணம் உயர் நிலையில் பக்குவப்படட்டும். குருதானாக வருவார்.
.
மனிதனுடைய எண்ணம் என்பது என்ன? அது பிரம்மத்தினுடைய சாயை தானே? பிரம்மத்தினுடைய இயக்கம் தானே எண்ணமாக, அறிவாக இருக்கிறது? உணர்ந்த நிலையில் அறிவாகவும், மயக்க நிலையில் மனமாகவும் அதுவே குறிப்பிடப்படுகிறது. அது தானாக அமர்ந்த நிலையில் பிரம்மமாக உள்ளது. பக்குவப்பட்டவன் நினைத்தால் குருவர வேண்டியதுதானே? (Fraction demands and Totality Supplies).
.
நம் முன்னோர்கள் செய்த தவப்பயனே குண்டலினி யோகம் :-
அவ்வாறு குரு வரவேண்டியதைத் தடுப்பது எது? ஏற்கெனவே எண்ணியிருந்த எண்ணங்களால் உருவான ஒரு மேடு மத்தியிலே தடுக்கிறது. இதைக் கணித்து உணர்ந்து கொண்டு நல்லதிலேயே மனதை நிலைக்கச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களுடைய நல்ல கர்மத்தின் விளைவாகத் தான் நீங்கள் இந்த மனவளக்கலையை ஏற்று இருக்க முடியும். அது நீங்கள் நேரடியாகச் செய்த தவப்பயனாக இருக்கலாம்; அல்லது உங்களது பெற்றோர்களுடைய தவப்பயனால் உங்களுக்கு இந்த உணர்வு நிலை கிட்டியிருக்கலாம். பெற்றோர்கள் மூலமாகக் கிட்டும் போது அதை நமது தமிழகத்துப் பெரியவர்கள் "கருவில் திரு உடையார்" என்று ஒரே சொற்றொடரில் வர்ணித்தார்கள்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
________ ________ _______ _______ _______
.
"குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்
குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்
மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று
மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்
இறைவனது திருநிலையில் இணையும் அப்போ
இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து
நிறைவு பெரும் தீய வினையகலும் வாழ்வில்
நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்".
.
அறிவறியும் தவம் :
"இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க,
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்.
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்கமாகும்."
.
பழிச்சுமை கழி:
"ஐயுணர்வின் வயம் ஏற்ற
ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
உடனே என் தொடர்பு கொள்வீர்!."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

மெய் வழி அறிவு ( God Consciousness) :


 உயிர் என்னும் இயக்க ஆற்றலுக்கு மூலமாகவும், இயங்க இடமாகவும், முடிவாகவும் இருப்பது சுத்தவெளியே. இதுவே எல்லாம் வல்ல முழுமுதற்பொருள். இதன் இயக்கமே உயிர். உயிரின் படர்க்கையே மனம் என்னும் உண்மை உணர்வே அறிவின் முழுமை.

இவ்வுண்மையைத் தெளிவாக, தவத்தால் தானே அதுவாகி உணர்ந்தால் பேரியக்க மண்டலம் ஒரே ஒரு தொடரியக்கக் களமாகும். அதனினின்று நான் வேறு இல்லை. மற்ற உயிரோ பொருளோ வேறு இல்லை. அந்த முதற் பொருளே தனது இயல்பூக்கச் சிறப்பால் அனைத்துமாக விளங்குகிறது என்ற நிறைபொருள் அறிவு பூக்கும். அவ்விளக்கம் மறவாது உடலோடு உயிர் இயக்கம் நடைபெறும் வரையில், உயிர்கட்கு அறிவாலும், உடலாலும் கடமை செய்து மனிதகுல வாழ்விற்கு வழிகாட்டியாக வாழ்ந்து நிறைவு பெறுவதே மெய்வழி அறிவாகும்.

மனமே உயிராகி, தெய்வமாகி விரிந்த பேரியக்ககள உண்மையினை உணரும் முழுமையில் அறிவாகிறது. இது தெய்வமே மனித உருவில் அறிவின் முழுமையில் காணும் விளக்கம். இவ்விளக்கம் வேண்டிய மக்கள் அறிந்து கொள்ள விரித்த கருத்துக்களே வேதம். இதை ஓதியவனும் ஓதியதை உணர்ந்து தானானவனும் ஞானி.

இன்பநிலை எய்த வாரீர் :-

"அறிவானது நிறை நிலையை ஆதியாக
அமைதி நிலையில் உணர்ந்து அதுவாம் போது
அறிவு உயர்ந்தகன்று அமைதிப் பேரின்பத்தில்
அணுமுதலாய் அண்ட கோடி தானேயாக;
அறிவே அவ்வந் நிலையில் ஒழுங்கியக்க
அமைப்பாகி முறை பிறழாதியங்கும் மேலாம்
அறிவின் பெருமை யுணர்ந்த இன்பவெள்ளத்
தானந்தத்தில் திளைக்க வாரீர் வாரீர்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 17 அக்டோபர், 2015

குண்டலினி யோகம் :

 "நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளிய முறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே செல்லாமல் கீழ்நோக்கிப் போகவிட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும், அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கின்றோம். மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ்நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம்.
.
சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே இயக்க மையத்தை முறையாக உசுப்பிவிடும் போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறை குண்டலினி யோகப்பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச்சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து, உணர்த்தி உள்ளனர். அவைகளில் அடிமட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.
.
ஒவ்வொரு மையத்திலும் உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக பலன் மிகும். இவ்வாறு இயக்கி விடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும், உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லை என்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றன ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளியமுறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"கட- உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,
கருத்தறியான் ஊன்றி இதைக் காணவில்லை
கட- உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி,
கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;
கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டி
கடவுள் என்றே சொல்லிச் சொல்லி வழக்கமாச்சு;
கட- உள் என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்
கடவுள் எங்கே? என்று பலர் தேடுகின்றார்.!"
.
"அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

தன்னிறைவுத் திட்டம்

நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும், திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவ முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அமைதியாக உட்கார்ந்து நீங்கள் 'எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்?' என்று கணித்துக் கொள்ளுங்கள்.

அதாவது - வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில், சூழ்நிலையமைப்பில் - நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்த அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும்? தான் குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் ஐவகைக் கடமைகள் உள்ளன.

உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு, எந்த அளவில் எவ்வாறு இக்கடமைகளைச் செய்து, பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்காக எந்தத் திறமை அல்லது இருப்பை வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அதற்காகவும் ஆற்றலைச் செலவிட வேண்டும்.

இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத் தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச்சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் "கர்மயோகம்" இதில் அடங்கியிருக்கிறது.

மனநிறைவு :
"எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில்
எதிர்ப்பின்றித் தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும்
எச்செயலும் மனவலிவு நுட்பத்தோடு ஆகும்
எதிர்காலம் வாழ்க்கைத் துறை அனைத்திலும் புத்துணர்வும்
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும்
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலைதாண்டி
எப்போதும் வளம் நிறைந்த மனநிறைவு உண்டாம்".
.
எதிர்பார்த்தல் ஏமாற்றம் :
"எதிர்பார்த்தல் எப்போதும் எவரிடமும்
ஏமாற்றமே விளைக்கும் ஏதுமனதில் அமைதி
எதிர்பார்த்தல் எனும்நோயை மாற்றி மனநலம்காண
எதுஉளதோ அதைஏற்று உதவிசெய்தே வாழ்ந்திடுவோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 15 அக்டோபர், 2015

வேண்டியதெல்லாம் கிடைக்கும் :

 நஎதிர்பார்த்தது, எதிபார்த்தபடி பிறர் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகி கொண்டே போகிறது. இந்த அடிப்படை தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டுவிடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா? தொடக்கத்தில் ஒருவார காலம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளுங்கள். (Do not expect anything from anyone for one week to start with and then extend the period to one month).அதற்குரிய விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு இப்பொழுது செய்கிறேன்; வருவதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் - இந்த அளவு வரும் எனக்கூட எதிர்பாராது நல்லதைச் செய்யும் போது நிச்சயமாக நன்மை பிறக்கும் என்று செய். அவ்வாறு செய்வதற்கு முன்னதாக இன்னொரு ஆராய்ச்சியும் தேவை. அதாவது உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே, அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும் திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்? இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன். செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு; செய்துகொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய். இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாதமாக வைத்து அந்தப் பயிற்சியையே நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
மற்றவரை எதிர்பார்த்தல், கையந்தால் வேண்டாம்....
.
அருள் தொண்டு :
"குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்
மற்றவரை எதிர்பார்த்தல், கையந்தால் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 14 அக்டோபர், 2015

எண்ணப் பதிவு

ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே, ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டு விட்டால்போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

விருந்தாளி - வேண்டாத விருந...
்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.

அதுமட்டும் அன்று. வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால், எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
எண்ணத்தின் சிறப்பு :
"எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்;
இன்பதுன்பம் விருப்பு வெறுப்பு உயர்வு தாழ்வு
எண்ணத்தின் நாடகமே, பிரபஞ்சத்தின்
இரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி.
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை".
.
நன்மையே நோக்கு :
"எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும்,
நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 13 அக்டோபர், 2015

பதிவுகளின் சின்னம் :



மனிதனுக்குப் பாவப்பதிவுகள் என்று இருந்தால் எப்படி அதைக் கண்டு பிடிப்பது ? அதனுடைய அடையாளம் என்ன என்றால் "உள்ளத்திலே களங்கம் உடலிலே நோய்" இதுதான் பாவப் பதிவுகளுடைய அடையாளம்....


சில சமயம் உடலிலுள்ள நோய்கள் வெளியில் தெரியாமல் கூட இருக்கலாம். அதனால் என்னிடம் எந்தப் பாவமும் இல்லை, பதிவும் இல்லை, நோயும் இல்லை என்று எண்ணிக் கொள்ள முடியாது.

ஒரு செடி வளர்கிறது, வளரும் போதே அதில் இவை, பூ, காய், பழம் பார்க்க முடியுமா என்றால் முடியாது. ஆனால், அதிலே எல்லாம் அடங்கியிருக்கிறது. அந்தந்த பருவம் வரும்போது தான் அதன் இலை, பூ, காய் தெரியவரும். அதே போல நம் உடலிலுள்ள பழிச்செயல் பதிவுகள் கூட அந்தந்த காலத்திலே அந்தந்த வயதிலே, அந்தந்தத் தொடர்பு வரும்போது தான் அது துன்பமாகவோ, நன்மையாகவோ தெரியவரும்.

பாவப் பதிவுடைய சின்னம் தான் இந்த உடலே என்றாலும் இத்தகைய வினைகளிலிருந்து விடுதலை பெற்று வினைத்தூய்மை, மனத்தூய்மை பெற்று இறைவனோடு கலக்க வேண்டும் என்ற சிந்தனை பெரும்பாலோருக்கு உள்ளது. அதற்கு மன உறுதியும் விழிப்பு நிலையும் பெறுவதற்கு ஒரு பயிற்சி முறையாகத் தேவை. அதற்கு குண்டலினி யோகமோ அல்லது வேறு ஒரு தியான முறையோ பழகினால் தான் மனவலிவும், விழிப்பு நிலையும், பொறுப்புணர்ச்சியும் ஏற்படும். அதன் பிறகு அன்றாட வாழ்வில் நமது மனம், மொழி செயல்களை நலம் தரும் முறையில் திட்டமிட்டவாறு செயல்படுத்தலாம்.
 மகரிஷியின் அருட்பணி:-
அன்பின் அழைப்பு :
"பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்".
.
அருட்பணி:
"அருள் ஓங்கி உலகெங்கும்
அமைதி நிலவவேண்டி
அருள் வேட்கைக் கொண்டோர்க்கு
அவர் தகுதியைக் கணித்து
அருள் விளக்கும் வாசலதை
அன்பாய்த் தொட்டுத் திறந்து
அருள் விளங்கச் செய்யும் ஒரு
அருட்பணியை மேற்கொண்டேன்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 12 அக்டோபர், 2015

இயற்கை உணர்வு (Natural Instinct)

இயற்கை உணர்வானது எல்லா ஜீவராசிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளது. பிறந்த குழந்தை தன் தாய் மார்பில் கிடத்திக் கொண்டால் பாலை உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது. பிறந்த மீன் குஞ்சு அடுத்த கணமே நீந்தத் தொடங்கி விடுகிறது. இதெல்லாம் இயல்பாக வருகிறது. அதற்கு "Instinct" என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இந்த "Instinct" என்பதற்கு மேலே "Intelligence" அறிவுக் கூர்மை உண்டாகிறது.

ஒரு பொருளைத் தொட்டால் சுடுகிறது அல்லது ஓரிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பாதுகாப்பாக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது. இதுதான் "Intelligence" என்பது. ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் முயற்சியே அது.

இந்த "Intelligence" வந்த பிறகு தான் "அறிவு", "Knowledge" வந்தது. தன்னுடைய அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழத் தொடங்குவது "Intelligence". அதற்கு மேலாகப் பலருடைய அனுபவத்தைத் தன்னுடைய வாழ்வில் கூட்டிக் கொண்டு விரிந்த ஒரு நிலையோடு அறிவை இணைத்துக் கொள்கின்றபோது அதை 'அறிவு' "Knowledge" என்று சொல்லலாம்.

இந்த "Collective Knowledge" வந்த பிறகு தான் ஒவ்வொரு பொருளோடும் ஊடுருவி, ஊடுருவி நோக்கவும் தன்னையும் உற்று நோக்கிப் பார்க்கிறபோது தான் "Intuition" உண்டாகிறது. அதில் இருந்து தான் எல்லாம்வல்ல இறையருள் சிறுகச் சிறுக உயர்ந்து இவனுக்கு வேண்டியது எல்லாம் உள்ளுணர்வில் கிடைக்கின்றன. இது உங்களுக்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"மனிதன் மனிதனாக வாழ ஏற்ற
ஒரு சாதனை வழியே மனவளக்கலை".
.
"அகத்தாய்வு என்பது மனத்தூய்மையை
நாடிச் செல்லும் தெய்வீகப்பயணம்".
.
"வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பது போல
அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கின்றது".
.
"தந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து,
தழைத்துஒரு உடலாகி உலகில் வந்தேன்;
அந்தஈருயிர்வினைகள் அறமோ மற்றோ
அளித்தபதி வுகள்எல்லாம் என்சொத் தாச்சு.
இந்தஅரும் பிறவியில்முன் வினைய றுத்து,
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவ தற்கு,
வந்தஒரு உதவிகுரு உயிரின் சேர்க்கை.
வணங்கிகுரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன் !"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உடலோம்பல் இறைவழிபாடு

 

இவ்வளவு சாப்பிட்டால் போதும், நன்கு ஜீரணமாகும். உடல் நன்றாக இருக்கும் என்று தெரிந்து அளவோடும், முறையோடும் சாப்பிடுவோம். ஆனால், சுவையாக இருக்கிறது என்று அதிகமாகச் சாப்பிட்டால் அதை ஜீரணிப்பதற்கு வேண்டிய அதிகப்படியான அமிலம் எங்கிருந்து சுரக்கும்? பற்றாக் குறையின் காரணமாக உணவு செரிக்காமல் தேங்கிப் போவதால் புளித்துப் போகிறது. அது வயிற்றில் புண்ணை உண்டாக்கித் துன்பம் தருகிறது. மனிதன் அறியாமையால் செய்யும் தவறுகள் தான் துன்பமாக விளைகிறது. இறையின் ஆற்றலால் எல்லாம் சரியாக நடக்கிறது.

ஆனால், நாம் ஆசையினால், மறதியினால், இறைவனின் செயலை மறந்ததினால் அதிகமாகச் சாப்பட்டோம். இறைவன் செயலில் குறுக்கிட்டோம். உறுப்புக் கெட்டுவிட்டது. அதன் விளைவாகத் துன்பத்தை அனுபவிக்கிறோம். இறையருள் எல்லாச் செயலிலும் கலந்து சரியான பலனைத் தந்து கொண்டே இருக்கிறது. நாம் அதைத் தடுத்தால் அந்தத் தடைக்குத் தகுந்தவாறு துன்பம் வரும். இதைத் தெரிந்து கொண்டால் இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டுமென்று முன்னோர்கள் சொன்னது தவறா? தவறாகச் செய்தால் துன்பந்தான் வரும். சரியாகச் செய்தால் இன்பமே நிலைக்கும். இந்த உண்மையைத் தெரிந்து கொள்கிறபோது இறையுணர்வு வருகிறது.

அதற்கு ஏற்றவாறு இந்த உடலுக்கு உணவு, ஓய்வு, உடலுறவு, எண்ணம், உழைப்பு இந்த ஐந்தையும் அலட்சியம் செய்யாமல், அதிகமாக அனுபவிக்காமல், முரணாக அனுபவிக்காமல் நாம் பார்த்துக் கொள்வோம். உடல் நலமாக இருக்கும். மனமும் அமைதியாக இருக்கும். அப்படி அறிவின் தெளிவோடு உடலை நலமாக வைத்துக் கொள்வதும் இறை வழிாபாடு தானே?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும்
உயிரின் களங்கமாகிய வாழ்க்கைச் சிக்கல்களும்
கவலையாக மாறுகிறது."
.
"ஆகாசம் உயிராக இருக்கிறது.
அது உடலில் இயங்குவதால் உடலுக்கு ஒரு
காந்த இயக்கம் கிடைக்கிறது".
.
"ஒரு குழந்தையின் உற்பத்தியானது
பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின்
தரத்திற்கு ஏற்றவாறு தான் அமையும்".
.
சிறியது உடல் பெரியது மெய் :-
"பெற்ற உடம்பின் பயனாய் ஊறுமுதல் ஐந்து
புலன்மூலம் அனுபவித்தல் சிற்றின்பமாகும்;
நற்றவத்தால் உயிரறிந்து அறிவறிந்தபோது
நாம் பிறவி எடுத்தபயன் பேரின்பமாகும்;
சிற்றின்பம் இன்றிப் பேரின்ப மென்பதில்லை,
சிறியதுடல் பெரியது மெய் சீவன் சிவன் உண்மை
பற்றின்றி வாழவில்லை அளவுமுறை கண்டால்
பற்றற்ற வாழ்வாகும் பகுத்துணர்வோம் நாமே".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 10 அக்டோபர், 2015

ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி

 


கவலை என்பது மனித சக்தியைக் குன்றச் செய்யும் அறிவின் திசை மாற்றமேயாகும். ஒரு நிமிடம் கூடக் கவலை என்ற பாதைக்கு எண்ண வேகத்தை விட வேண்டாம். துணிவும், விழிப்பும் கொண்டு முயற்சியாக மாற்றிக் கொள்வதே சிந்தனையாளர்களின் கடமை. கவலை என்பது உடல், அறிவு, குடும்பம், ஊர், உலகம் என்ற துறைகள் அனைத்திற்கும் மனிதனுக்கு நஷ்டமே தரும். முயற்சி எவ்வகையிலேயும் லாபமே தரும்.

இயற்கை வளம் என்ற இன்பப் பேரூற்று மக்களின் அறியாமை என்ற அடுக்குப் பாறைகளால் பலதுறைகளில் மறைக்கப்பட்டுள்ளது. அறிவின் விளக்கமான துணிவு என்ற திருகுயந்திரம் கொண்டு வேண்டிய அளவில் அவ்வின்பத்தை அனுபவிக்கலாம். தேவையுணர்வு, சந்தர்ப்பம் என்பனவற்றால் செயல்களும், செயல்களால் உடலுக்கும், அறிவிற்கும் ஒருவிதமான பழக்கமும் ஏற்பட்டு அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் எண்ணமும் உடலியக்கமும் நடைபெற்று வருதல் மனிதருக்கு இயல்பு என்றாலும், சிந்தனை, துணிவு, விடாமுயற்சி என்பனவற்றின் மூலம் பழக்கத்தை மாற்றி வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆராய்ச்சி! முயற்சி!! வெற்றி!!! என்ற மந்திரத்தைத் தினந்தோறும் பல தடவை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில நாட்களுக்குச் செபித்துக் கொண்டே வரக் கவலை என்ற வியாதியும் ஒழியும். வாழ்வில் ஒரு புதிய தெளிவான பாதை திறக்கப்படும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்".
.
"கவலை இல்லாத மனிதன் உலகில் உண்டு,
சிக்கல் இல்லாத மனிதன் உலகில் யாரும் இல்லை".
.
"கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்,
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்,
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்

 

கடவுள் எனப் படுபவனே மனிதனானான்,
கருத்தியங்கி, கருத்துயர்ந்து, கருத்தறிந்தான்;
கடவுளாய் அனைத்துமே கண்டு விட்டான்
காண்பவனே ஆதியந்த மாகி நின்றான்
கடவுள் நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக்
கருத்துணர்ந்த நூல்கள் பல எழுதிவைத்தான்
கடவுள் ரகசியமதனை வெளியாய்க் காட்டும்
கடமையே சிறந்ததெனக் கொண்டான் ஞானி.

எந்தத் தத்துவத்தைக் கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.

மனிதன் தன் அறிவை இயக்கி, அறிவை உயர்த்தி, அறிவையும் அறிந்து விட்டான். அவ்விளக்க நிலையில் தானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் கண்டுவிட்டான். காண்பவனே மூலமாகவும் முடிவாகவும் இருக்கும் ஏக நிலையைக் கண்டு கொண்டான்.

இந்த நிலையை அறிந்தவன் அறியாதவர்களுக்கு உணர்த்தும் சிறந்த நோக்கத்தோடும், பொதுவாக அறிவைப் பண்படுத்தும் பொருட்டும், ஆராயத் தூண்டும் பொருட்டும், பல நூல்களும் எழுதினான்.

மூலாதாரத் தத்துவத்தின் இரகசியத்தை அறியா நிலையில் - அறிய வேண்டிய நிலையில் - உள்ள யாவருக்கும் அறிய ஆவன செய்வதைத் தன்னிலை விளக்கம் பெற்ற ஞானிகள் தங்கள் கடமையாக் கொண்டார்கள். தம்மையறிந்தவுடன் ஞானிகளின் கடமை தீர்ந்து விடவில்லை.

அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான். கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய், உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்டதாய், அறிவு நிலையாய், அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய், இருப்பதை உணருகிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வியாழன், 8 அக்டோபர், 2015

நான் யார்?

நான் உடல் என்று குறுகி நிற்பதா? நான் மனம் என்று விரிந்து நிற்பதா? நான் உயிர் (ஆன்மா) என்று உயர்ந்து நிற்பதா? நான் பிரம்மம் என்று உணர்ந்து, முழுதுணர்ந்து நிற்பதா? குறுகி நின்றால் விரிவு இல்லை. விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும் தான் உண்டு, உயர்வு இல்லை. உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டுந்தான் உண்டு; உணர்வு, முழுதுணர்வு இல்லை. உணர்ந்து நின்றால் இவை அனைத்தும் உண்டு.

உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனம் என மறுபெயர் பெற்றிருக்கிறது. உயிரோ அணுக்கூட்டம். அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே, நான் பிரம்மம் என்பது தெளிவாகிறது.

நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலை உணர்ந்த தெளிவில்தான் ஆசை ஒழுங்குறும். எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, எதை விடப் பெரிது வேறொன்றும் இல்லையோ, அதுவே நானாக இருக்கும் போது அந்நிலை உணர்ந்த தெளிவில் தான் இருக்கும் போது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவா எழ இடம் எது?

என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்தபோது எதெதனோடோ என்னை ஒப்பிட்டுக் கொண்டேன். அப்போது நான் பெரியவன், நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது. ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்ட போது எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லாமலல்லவா போய் விடுகிறது. நானே பிரம்மம் ஆக இருக்கிறேன், பிரம்மம் எல்லாமாக இருக்கிறது என்னும்போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாக இருக்கும் நிலையையும் நான் உணர்ந்து மறவாமல் இருக்கும் போது, எதன் மீது பற்று வைப்பது? என்னுடையது என்ற பற்று எழ முகாந்திரமே இல்லையே! நான் இன்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் நான் யார்? நான் பிரம்மம் என்ற தெளிவுதான்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"நான் எனும் எழுச்சியை நாடி ஆராய்ந்திட
நான் முதலில் மனமாகப் பிடிபடும்
நான் மனத்தின் மூலம் நாட அங்குயிராகி
நான் உயிர் மூலத்தில் நற்சிவமாய் விடும்".
.
"நான் யார் எனும் வினா நல்லுயிர்ப்பு அறிவிற்கு
நான் அகம்பாவமாம் குறுகிய நாட்டத்தில்,
நான் பேரறிவாகும் நற்றவ ஆழ்வினில்,
நான் முழுமைபெற நலிவில்லா மெய்ப்பொருள்".
.
பிரம்மம் :
"நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன் அஃது
நினைவதனின் முடிவாகும், மூலமாகும்
சூனியமே! தோற்றமெலாம் அதிலிருந்தே!
சுத்த வெளி! மௌனமது! உவமை இல்லை!
ஊன் உருவில் ஓடும் உயிர்ச்சுழற்சி வேகம்
உற்பத்தி செய்கின்ற மின் சாரத்தில்
தோன்றுகின்ற அலை இயக்கம் அறிவு ஆகும்.
சுயநிலையில் தியானித்து அறிதல் வேண்டும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

புதன், 7 அக்டோபர், 2015

கோள்களும், ஜீவனும்

 

ஒவ்வொரு கோளும் பல இரசாயனங்களைக் கொண்டு அவை பரிணாமம் அடைந்ததற்குத் தக்கவாறு அலை வீசிக் கொண்டேயிருக்கும். இரசாயன அம்சங்கள் அடைந்த அந்த அலை எந்தப் பொருள் மீது வீசுகிறதோ, அந்தப் பொருளிலே, அந்த அலையின் தன்மை அத்தனையும் தூண்டிவிடும். ஒன்பது கோள்களினுடைய தன்மையும், அதன் அலைகள் மூலம், நமக்கு வந்து கொண்டேயிருக்கும்.

உலகமும், மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிச் சுழன்று கொண்டேயிருப்பதனால் அவ்வப்போது அவற்றின் தூரம் வேறுபடுகிறது. ஒரு சமயம் 10 கோடி மைல் தொலைவிலிருக்கும் ஒரு கோள் இன்னொரு சமயம் 100 கோடி மைல் தொலைவிற்குச் சென்று விடும். அவ்வப்பொழுது கிட்டவோ அல்லது தொலைவாகவோ போகப்போக அந்த அலையினுடைய அழுத்தம் வேறுபடும்.

அதற்குத் தகுந்தவாறு அந்த அலையிலிருந்து வந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் வேறுபடும். அதனால் ஒவ்வொரு ஜீவனுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், அந்தக் கோள்களின் மாற்றத்தினால் இரசாயன வேறுபாடு உண்டாகும். அதைக் கொண்டு உடலுக்கு நன்மை தீமை, அறிவுக்கு நன்மை தீமை இவைகள் எல்லாம் உண்டாகும்.


நிலையாமை நினைவிற்கொள்:-
"பிறப்பு இறப்பு நடுவே பூவுலக வாழ்வு இதை
மறப்பு நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை."
.
"அணுவில் அமைந்துள்ள சட்டங்கள் விதியாகும்
அறிவாய் அனுபவிக்கும் ஆற்றலே மதியாகும்".
.
விதி மதி:-
"இயற்கைச் சக்தியே விதி
இறை யறிந்த அளவே மதி".
.
"கருஅமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,
ககனத்தில் கோள்கள் நிலை, சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும், மாற்றும், தரமொக்க இன்பதுன்பம்
தகுந்த அளவாம்; இதிலோர் சக்தி மீறி
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி
பின்னும் அதிகரித்துவிட மரணமாகும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 6 அக்டோபர், 2015

உன்னையே நீ அறிவாய்

 

இரும்பு ஒரு கரண்டியாக்கப்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இரும்பு என்றாலும் கரண்டி என்றாலும் அது ஒரு பொருளையே குறிக்கும். அதுபோல் தெய்வம் என்ற அருட்பேராற்றலே பேரியக்க மண்டலத்தில் இயங்கும் எல்லாமாக இருக்கிறது. நீயுமாக மனித வடிவமாக இருப்பதும் அதுவே. இந்தக் கருத்தில் மனத்தைப் பதித்துக் கொண்டு உண்மையை உணர்ந்து கொள். நீயென்றாலும் தெய்வமென்றாலும் ஒரு பொருளையே குறிக்கும்.

கரண்டியை உருக்கிவிட்டால் இரும்புக்குக் கொடுத்த வடிவம் மறைந்து விடுகிறது. அவ்விரும்புக்கு கரண்டி என்று கொடுத்த பெயர் மறைந்து விடுகிறது. என்ன மிச்சம்? இரும்பு தான். இரும்பைப் பல வடிவங்களாக்கி, பெயர்களை அக்கருவிக்குக் கொடுக்கிறோம். வடிவத்தையும் பெயரையும் கழித்துவிட்டால் மிஞ்சுவது இரும்புதானே!

அதேபோன்று, நீ உன்னையறிந்து கொள்ள முயற்சி செய்! மனிதனென்ற வடிவத்தையும், உன் செயல் பதிவுகளாக உள்ள வினைப்பதிவுகளையும் கழித்துப் பார்! உன்னில் மிஞ்சுவது எல்லாம் வல்ல அருட்பேராற்றலாக விளங்கும் பரம்பொருளே.

"உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு,
அறிவுக்குள் அருட்பேராற்றலின்
இயற்கை மெய்ப்பொருள்".
.
"உணர்ந்தால் தெளிவு,
உணராவிட்டால் மயக்கம்".
.
"உயிருக்குள்ளாகத் தேய்வமே அறிவாக,
இருக்கிறது என்று விளக்கிக் காட்டுவது தான்
அகத்தவப்பயிற்சி " (Simplified Kundalini Yoga) .
.
"இறைநிலை, பரமாணு, பரமாணுக்கள்
கூடியதோர் தொகுப்பாம் விண்கள்
நிறைவெளியில் விண் சுழல, வெளி அழுத்த, விளைவாக
விண்கரைய, அக்கரைசல் வெளியேற, அனைத்தலைகள் காந்தமாச்சு;
மறைபொருளாம் காந்தமென்ற நுண்துகளின் தன்மாற்றம்
அழுத்தம் முதல் ஐந்தாகும் முடிவு நிலை மனமாம்
குறைவில்லா இயற்கையதன் தன்மாற்றச் சீரதனை
மேற்சொன்ன வரிசைகளில் வைத்து மனப்பாடம் செய்வீ"ர்".
.
" அவனில் அணு, அணுவில் அவன்
உன்னில் எல்லாம் உன்னை நீ அறி".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 5 அக்டோபர், 2015

சமநிலை (Equanimity)

 

அறிவின் முழுமை பெற்ற ஞானியருக்கு இறைநிலையின் முழு வடிவமே பிரபஞ்சம். அதிலுள்ள எந்தப் பொருளையும் வெறுப்பு கொண்டு ஒதுக்கி விட முடியாது. பொதுவாக, துன்பம் தரும் ஒரு பொருளை, உடலுயிரை, செயலை வெறுப்பது, ஒதுக்குவது, பகைப்பது, அழிப்பது என்பது மனிதனுடைய இயல்பாகும். இது தன்முனைப்பால் உணர்ச்சி வயப்பட்டு வெளியாவதாகும்.

ஆனால், ஞானிகளோ இந்த எல்லை கட்டிய மனோ நிலையைக் கடந்தவர்கள். இப்பேரியக்க மண்டலத்திலுள்ள எந்தப் பொருளானாலும் அது பரிணாமத் தொடரிலே ஒரு தனித்த மதிப்புடையது. குறுகிய அறிவுடையோர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் தேவையே இல்லை என்றோ அல்லது ஏதோ ஒரு வகையில் துன்பமளிப்பதாகவோ தோன்றும்.

ஆயினும், அதுவே பிரபஞ்சப் பரிணாமம் என்ற இயக்க நியதியிலே வேறு பல நன்மைகளிலிருந்து பிரிக்க முடியாத, பல நன்மைகளுக்கு இயல்பூக்க வித்தாகவும் இருக்கும். சில நிகழ்ச்சிகள் மனிதன் அறியாமையால் ஆற்றிய செயல்களின் விளைவாக இருக்கும். அவை துன்பமளிப்பவையேயாயினும் அந்த வினைப்பதிவு அழியும் மட்டும் அது நிலைத்துத் தான் இருக்கும்.

இவற்றையெல்லாம் உணர்ந்து தெளிந்த அறிவிலே திட்டமிட்டு வாழ்பவர் ஞானி. அவருக்கு வெறுப்பு ஏது? மேலும் அவ்வாறு துன்பம் தந்தவரிடமும் வெறுப்புக் கொள்ளாத சால்பு நிலையைச் சார்ந்துள்ளவரே உண்மையில் ஞானியாவார். சிறந்த ஒரு குருவும் ஆவார். பிறருக்கு வழிகாட்டக் கூடிய தகுதியும் பெற்றவராவார். உணர்ச்சியிலே இந்தச் சமநிலை (Equanimity) அடைந்தவர் காட்டும் பாதையிலே நாம் சென்றோமானால் துன்பம் நம்மை அணுகாது.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உணர்ச்சிப் பிரிவுகள் :
"உணர்ச்சியோ உடலில் உயிர் உராயும் விளைவு
உணர்ச்சி சமநிலையானால் உண்மையில் பேரின்பம்
உணர்ச்சி மெல்லியதாக உந்த அதே இன்பமாம்
உணர்ச்சி வல்லுணர்வாக உயர்ந்துவிட அதே துன்பம்."
.
நிறை நிலையில் அமைதி:
"எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம்
இரவு பகல், சிறிது பெரிது, ஆண் பெண், கீழ் மேல்,
நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,
நட்டம் லாபம் என்ற அனைத்தும் தோன்றும்;
வல்லமையும் அதன் முழுமை நிலையாய் உள்ள
வரைகடந்த மெய்ப்பொருளாம் அகத்துணர்ந்தால்
அல்லலற்று அறிவு விழித்தும் விரிந்தும்
அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

விடுதலைக்கான வழி

 

சூரிய ஒளியினால் சூடு பெற்றுக் கடலிலிருந்து ஆவியாக மாறி மேகமாகி அது குளிர்ந்து எந்த இடத்தில் மழையாகப் பெய்தாலும் அந்த நீர், தனக்குப் பிறப்பிடமாகிய கடலை நாடியே ஓடுவது போல, இறை நிலையிலிருந்து புறப்பட்டுப் பல தலைமுறைகளாக ஜீவன்களில் இயங்கி, மனிதனிடம் இறுதியாக வந்து இயங்கிக் கொண்டிருக்கும் சிற்றறிவு, முற்றறிவான இறைவனை நாடியே அலைகின்றது. அத்த கைய வளர்ச்சி நிலையில் உடல் தேவைக்கான பொருள், புலன் இன்பம் இவற்றில் ஈடுபடுகிறது. இங்கு தான் அறிவானது தான் போக வேண்டிய இடத்தை மறந்து, அடுத்தடுத்து தொடர்பு கொண்ட பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றோடு தொடர்பும், மேலும் பொருள்களும் இன்பமும் எளிதாக மேலும் மேலும் உழைக்காமலே கிடைக்கக்கூடிய வழிகளாகிய அதிகாரம், புகழ் இவற்றின் மீது நிறைவு பெறாத அவாவையும் பெருக்கிக் கொள்ளுகிறது.

எவ்வளவு தான் பொருளோ, புலன் இன்பமோ, புகழோ, அதிகாரமோ அமைந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் உயர்வாக வேண்டும் என்ற உணர்ச்சி வயமான மன அலையில் இயங்குகிறது. இதனால் அளவு மீறியும், முறை மாறியும், ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் பயன்படுத்த அவைகள் பழுதுபட்டு உடல் துன்பம், மன அமைதியின்மை, செயல் திறமிழத்தல், இதனால் சமுதாயத்தில் மதிப்பிழத்தல் ஆகிய குறைபாடுகளோடு வருந்திக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது. மெய்யுணர்வு பெற்ற குருவழியால் அறம் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் தடம் மாறிய மன ஓட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும்; வேறு எந்த வழியும் மனிதன் உணர்வதற்கு இல்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"ஆசை முறைகெட்டுப் போனால் பேராசை
முறைப்படுத்தப்பட்ட ஆசை நிறைமனம்".
.
"எண்ணம்:- ஒவ்வொருவருடைய
எண்ணம் தான் வாழ்வின் சிறப்பாக உள்ளது".
.
"நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்'
நெஞ்சம், மனம், பேச்சுஇடைப் பிணக்காகும் பொய்கள்;
மறைமுகமாய் நேர்முகமாய் பிறர் உளம் வருத்தல்,
மற்ற உயிர் சுதந்திரமும் வாழ்வின் வளம் பறித்தல்;
நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல், மேலும்
நெறிபிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம்தன்னைக்
களங்கப்படுத்திவிடும் கருத்தொடு சீர்செய்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 3 அக்டோபர், 2015

செயல் விளைவுத் தத்துவம்

உடல்மன ஆற்றல்களை, இயற்கையாற்றல்களுக்கு உட்படுத்தியும் ஒத்தும் செயல்படுத்தினால் - பேரறிவையும், பேராற்றலையும் இயல்பாகக் கொண்ட இயற்கையானது உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்தியாகவும், வெற்றி மற்றும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமையும் என்பதே வாழ்வின் பயன்களை ஆழ்ந்து சிந்தித்துக் கண்ட தெளிவு ஆகும்.


இதுவே தன்முனைப்பின் அடக்கம், தன்முனைப்பு அடங்கப் பெற்ற மனிதனுக்கு, இறைநிலையின் பேராற்றலும், பேரறிவும் சொந்தமாகி விடுகின்றன. இந்த உண்மையினைப் பேரறிஞர் வள்ளுவப் பெருந்தகை எவ்வாறு உணர்த்தியிருக்கிறார் என்று அவர் அருளியுள்ள ஒரு குறளின் மூலம் உணரலாம்.

"அடக்கம் அமர்அருள் உய்க்கும் அடங்காமை

ஆர் இருள் உய்த்து விடும்"


தனிமனிதன், மனித சமுதாயம், மனித குலம் எவரெனினும், 'அடக்கம்' என்ற உயர் நெறியை உணராமலும், அதன் வழியே வாழாமலும் 'அடங்காமை' என்ற குழியில் விழுந்து அதனால் விளையும், பெருகும் துன்பங்களே மனித குல வாழ்க்கைத் துன்பங்கள் ஆகும். இயற்கை நியதியை அறியாமலோ, அலட்சியம் செய்தோ, உணர்ச்சி வயப்பட்டோ மனிதன் செயலாற்றும் போது ஏற்படும் விளைவுகள் தான் துன்பங்கள், பொருளிழப்பு, ஏழ்மை, நோய்கள், உறுப்பிழப்பு, அகால மரணம் ஆகிய அனைத்துக் கேடுகளுமாகும். செயல்-விளைவுத் தத்துவத்தில் முதல்பாடம் இதுவே.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
செயலில் மெய்ப் பொருள் :
"செயலிலே விளைவாக தெய்வ ஒழுங்கமைப் பிருக்கப்
பயனென்ன தவறிழைத்துப் பரமனைப் பின்வேண்டுவதால் ?".
.
"வேண்டியதற்கு படிகட்டி வேண்டாததை
வடிகட்டும் எண்ணமே உள்மன அமைதிக்கு உரம்".
.
"செயலின் விளைவாக இறைவனைக்
காணும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்".
.
இருளும் - ஈசனும் :
"மாசற்ற ஒளி ஊடே, மறைந்திருக்கும் இருள்போல,
ஈசன் அறிவில் இருக்கும் நிலை".
.
சத்-சித்-ஆனந்தம் :
"கண்ணும், ஒளியும், காண்பவனும் ஒன்றேபோல்,
எண்ணம், இயற்கை, ஈசன் எனும் மூன்றும் ஒன்றாகும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 2 அக்டோபர், 2015

உணவும், மருந்தும்

 

"நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச் சீரணிக்கும்".

எனவே, சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ளவேண்டும்.

உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக நினைப்பதும் சரியன்று.

மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு.

அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத் தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும் தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு நோயைக் குணப்படுத்தி வேறொரு நோயை உண்டுபண்ணக் கூடியதே. இதைத் தவிர்க்க இயற்கையான அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பின்னரே அடுத்த உணவு கொள்ளலாகும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
உணவும் எண்ணமும் :
"உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்;
எண்ணமோ உணவில் எழுச்சிபெறும் இயக்கமே
உண்பதோ எண்ணத்தால் உற்றுப்பார் உறவையறி".
.
அளவோடு உணவு :
"உணவே உடலாக வந்துள்ளது ஆகையினால்
உணவை உண்டுதான் உயிர் வாழவேண்டும்
உணவில் அளவுமுறை மீறிட மீறிட
உணவாகவே உடல் மாறியும் போமன்றோ?"
.
அறிந்து அளவுடன் கொள்க :
"உறக்கம், உழைப்பு, உடை, உணவு
இவைகளில் எவற்றையும்,
மறுப்பதும், மிகுப்பதும் மனித உடலின் மகத்துவம்
அறியாதோர் செய்கையாம்".
.
பெரியோர் இயல்பு :
"உணவில் எளிமை, உழைப்பில் கடுமை,
ஒழுக்கத்தில் உயர்வு, உத்தமர் இயல்பு".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

வியாழன், 1 அக்டோபர், 2015

வேண்டல் வளம்

 

ஒவ்வொருவருடைய தேவையையும், விருப்பத்தையும் உணர்ந்து, எந்த இடத்தில் குறை இருக்கிறது, எந்த இடத்தில் நிறை இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு உதவி செய்வது, வாழ்வது தான் அன்பும் கருணையும். இதைத் தமிழில் வேண்டல் வளம் என்று சொல்வார்கள். வளம் என்றால் நம்மிடத்தில் இயற்கையாக உள்ள இருப்பு என்பதாகும். வேண்டல் என்றால் அவ்வப்பொழுது ஏற்படக் கூடிய தேவை என்ன என்பதாகும். இதே போன்று பிறரின் வேண்டல் வளம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வளத்தைப் பயன்படுத்தவும், வேண்டலைப் பூர்த்தி செய்யவும் உதவ வேண்டும் என்பதுதான் வேண்டல் வளம் தெரிந்து விளைவறிந்து வாழ்தல் என்பதாகும்.

இப்பொழுது அந்த வார்த்தை வழக்கில் வண்டவாளம் என்றாகி விட்டது. நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும், நம்மோடு இணைந்து உள்ளவர்களுக்கும் வேண்டல் வளம் தெரிந்து விட்டால், நான் எந்த அளவில் என்னுடைய வேண்டல் வளம் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு அவர்களின் மூலமாக என்ன பெற முடியும், அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிந்தால், உயிர்களிடத்து அன்பும், கருணையுமாக இருக்கக் கற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் ஒவ்வொருவரும் அன்பையும், கருணையையும் எழுச்சி பெறச் செய்து, அதன் வழியே வாழ முற்படும்பொழுது எல்லா உயிர்களோடும் ஓர் இனிமை ஏற்படும் அல்லவா? அந்த இனிமை தான் வாழ்வில் முழுமை தரும், அறிவை உயர்த்தி வைக்கும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ,மனத்தாலோ
தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது".
.
"தன்னோடு இணைந்துள்ள மற்றொன்றுக்குத்
தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து
அதனைக் காத்து வருவது கருணை".
.
"இயற்கையை ஆராய்ந்து பார்த்தால்
அன்பும் கருணையும் தான் எங்கும் எதிலும்
அமைந்திருக்கக் காணலாம்".
.
"நம்மை நோகடிபவர்களை நாம் நேசிக்கலாம்.
நம்மை நேசிப்பவர்களை ஒரு போதும்
நோகடிக்கக் கூடாது".
.
"அன்பிரக்கம் தொண்டு தவம் ஈகை இன்சொல்
ஆன்மிக நெறியாகும் போற்றிக்காக்க
துன்பங்கள் குறைந்துவரும் மேலும் தெய்வத்
துணைகிட்டும் வாழ்வில் புகழ் நிறைவு ஓங்கும்;
நன்முறையில் தனிமனிதன் வாழக்கற்றால்
நாட்டினிலும் வீட்டினிலும் அமைதி ஓங்கும்,
இன்பமயமே எங்கும், இந்த உண்மை
எளிதன்றோ கற்பதற்கும் வாழ்வதற்கும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 30 செப்டம்பர், 2015

மிருகம், மனிதன், மாமனிதன்

 

புலன்கள் மூலமாகப் பொருட்களைப் பார்ப்பதும், அப்படி நாம் பார்க்கும் போது நமது ஜீவகாந்த சக்தி செலவு ஆவதால் இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருவதும், புலன்கள் மூலமாக வரக்கூடிய வாழ்க்கை. உலகியல் வாழ்க்கை. அதற்கு மேலாக உண்மையை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு அருள்வாழ்வு வாழ வழி வகுத்துக் கொண்டு வாழக்கூடிய ஒரு பேராற்றலும் மனிதனிடத்தில் இருக்கிறது. ஆனால், மற்ற ஜீவராசிகளிடமும் இந்த அறிவு இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது. ஆனால் அந்த அறிவைச் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பே அவற்றுக்கு இல்லை.

பசி எடுத்தால் சாப்பிடவேண்டும். ஆனால், சாப்பாட்டிற்கு உணவு உற்பத்தி செய்ய எந்த ஜீவனாலாவது முடியுமா? உலகத்திலே, மனிதன் ஒருவனுக்குத் தான் தனக்கு வேண்டிய உணவைத் தானே உற்பத்தி செய்து சாப்பிடக்கூடிய திறமை உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு இல்லை. அவை என்ன செய்கின்றன?

'மற்றொரு ஜீவன் தன் வாய்க்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் தன்னால் கொன்று அதைச் சாப்பிடக்கூடிய, தன் வலிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்' இப்படித்தான் அததற்கு உரிய உணவை எல்லா ஜீவனும் தேடிக் கொள்கின்றன. உலகத்திலுள்ள எந்த ஜீவன் ஆனாலும் சரி, ஓரறிவான மரம், செடி, கொடி தவிர இரண்டாவது அறிவாகத் தோன்றி புழுவிலிருந்து மற்ற பூச்சிகள், பறவைகள், கால்நடைகள் எல்லாமே ஒரு உயிரைக் கொன்று வாழக்கூடியவை தான். ஆனால், அதனாலெல்லாம் அது கொலை செய்கிறது என்று உயிரினங்கள் பேரில் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது.

ஆனால், அதையே மனிதன் செய்யும்போது குற்றமாகக் கொள்கிறோம். ஏன் என்றால், துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ வேண்டும் என்று நம்மால் நினைக்க முடியும். இந்த உணர்வைச் செயல்பாட்டில் கொண்டு வந்தால் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட்டு வாழக்கூடிய அறிவு மனிதனிடம் இருக்கிறது. இப்போது மனிதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பை உணர்ந்து யார்க்கும் எவருக்கும் துன்பம் உண்டாகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, இதெல்லாம் தெரியாமல் துன்பத்தில் உழலும் மற்ற மனிதர்களும் அறிவு மேம்பாடு பெற அருள் தொண்டாற்றுவதற்கு அந்தச் சிறந்த மனிதன் முன்வரும்போது மாமனிதனாகிறான்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி
அதை ஏற்றுக்கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்து
பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு".
.
"கடன், வறுமை, கல்வியின்மை என்ற மூன்று
.களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும்.
உடன்பிறந்தார் போல் உள்ளம் ஒன்றி மக்கள்
உயர்நிலையில் வாழவைக்கும் ஆட்சி வேண்டும்".
.
சமாதான முயற்சி :
"ஓர் உலக ஆட்சியினை நிறுவி விட்டால்
யுத்தமே நிரந்தரமாய் நின்று போகும் "நாம்
யார்" என்ற கேள்விக்கு விடையைக் காணும்;
நற்றவத்தால் ஒழுக்கம் அருள் அன்பு ஓங்கும்,
பார் முழுதும் அறியாமை ஏழ்மை போக்க
பல அறிஞர் செல்வந்தர் இணைந்த வாழ்க்கை
சீர்திருத்த சங்கத்தால் மக்கட் கெங்கும்
திட்ட மிட்டுத் தொண்டாற்ற உலகம் உய்யும்".
.
"இறப்பதற்கே பிறக்கின்றோம் எனினும் அந்நாள்
எண்ணத்திற்கெட்டு மட்டும் இந்த உண்மை
மறக்காமல் மற்றவர்க்குத் தீங்கு இன்றி
மண்மீது உழைத்துண்டு அன்பாய் வாழ்வோம்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஆக்கினை

உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே எண்ணிப் பழகிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலையில், மன அலைகள் வினாடிக்கு 14 முதல் 40 வரை (14 to 40 cycles per second) அமைகின்றன. ஆற்றல் முழுவதும் நுணுகி, மனத்தை, மன அலையை, சுழலை அமைதிப்படுத்தும்போது 'பீட்டா அலை' (beta wave) என்று சொல்லக்கூடிய உணர்ச்சி நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு வந்துவிட முடியும். உதாரணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தின் மானேஜராக இருக்கும் பொழுது அவரது அதிகாரம் அந்த நிறுவனம் முழுவதும் வியாபித்திருக்கிறது; அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பகுதி - அதிகாரியுடைய அதிகாரம் அந்தப் பகுதியோடு முடிகிறது. அந்தப் பகுதியில் பணியாற்றும் ஒரு எழுத்தரின் பொறுப்பு, அவர் பார்க்கும் கோப்புகளோடு நின்றுவிடுகிறது. அதுபோலவே, நம் மனம் எதை எண்ணிப் பழகி இருக்கிறதோ அந்த அலை நீளத்திலேயே இருக்கும். தியானத்தின் போது அதை விடுத்து எல்லா நிலைகளிலேயும் கொண்டு வந்து நாம் இணைப்புக் கொடுத்துப் பழகிக் கொள்கிறோம். 'பீட்டா அலை' (beta wave)யில் இருந்து 'ஆல்பா அலை' (alpha wave)க்கு வருகிறோம்; அதாவது உறக்கத்தில் என்ன நிலை வருமோ, அந்த நிலைக்கு வருகிறோம். ஆனால் உறங்காத விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம். இதைத் தான் ஆக்கினை நிலை என்று தியானப் பயிற்சியிலே சொல்கிறோம்.

உள்ளுணர்ந்து உயிரைக் கவனிக்கிறபொழுது, மனம் ஒரு பொருளாகவோ, வடிவமாகவோ, குணமாகவோ மாறாது. அப்படி ஒடுங்கி ஒடுங்கி மனம் நுணுகிய நிலையில் இருக்கும்; அது வரையிலும் 'ஆல்பா அலை' (alpha wave) நிலையிலேயே இருக்கும். உறக்க நிலையிலும் மனம் வடிவம் எடுப்பதில்லை, குணமாக இருப்பதில்லை. அதனால், 'ஆல்பா அலை' (alpha wave) உறக்கத்தில் தானாகவே வந்து விடும்.

இத்தகைய அலை நீளத்தை நம்மால் பாதுகாக்க முடியுமானால், நமக்கு எந்த விஷயத்திலும் உணர்ச்சி வயப்பட்ட நிலை வாராது; மிகுந்த பற்றுதலினால், ஆழ்ந்த உணர்ச்சி வயப்படும் நிலை ஏற்படாது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
குண்டலினி யோகம் :
"அறியாமை, உணர்ச்சிவய மயக்கம், மேலும்
அலட்சியம் மூன்றுமே அறிவின் ஏழ்மை;
அறிவுகுறுகிப் பிறழ்ந்து துன்பம் நல்கும்
அனைத்துச் செயலும் பிறக்கும் உண்மைகாணீர்
அறிவை அயரா விழிப்பில் பழகிக் கொண்டு
அவ்வப்போ எழும் எண்ணம் ஆய்ந்து தேர்ந்து
அறிவின் ஒளியாய் வாழ ஆற்றல் நல்கும்
அருள் வழியே குண்டலினி யோகம் ஆகும்".
.
குண்டலினி தீட்சை :
"இனி இந்தச் சங்கடங்கள் எவர்க்கும் வேண்டாம்
எண்ணத்தின் ஓர்மைக்கு ஏற்றதான
தனிச்சிறப்பாம் குண்டலினி தீட்சை உண்டு
தகுதியுளோர் விருப்பமுளோர் அனைவர்கட்கும்
கனிவுடனே கைவிரலால் நெற்றி தொட்டு
கனல் மூட்டிக் கருவெழுப்பிக் கருத்துணர்த்தும்
புனிதமுறையைப் பரப்பஉளம் உவந்தும்
பொறுப் பேற்றும் இருக்கின்றேன் தொடர்பு கொள்வீர்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 28 செப்டம்பர், 2015

கவலை ஒழித்தல்

 

தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. நிகழ்ச்சிகளுடனோ அல்லது பொருள்களுடனோ எந்தத் தொடர்பும் இல்லாமல் மனதுடன் தொடர்பு கொண்டுள்ளது கவலை. மனம் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியாமல் போனால், பிரச்சினைகளை முடிக்க முடியவில்லை எனில், அந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் கவலையின் பிடியில் சிக்கிக் கொள்கின்றது. தேவைக்கும், இருப்புக்கும் இடையே இடைவெளி, எதிர்பார்ப்புக்கும் பெறுவதற்கும் இடையே இடைவெளி, தனக்கும் பிறர்க்கும் இடையே ஏற்படும் முரண்பாடு, ஆசைக்கும் திறமைக்கும் இடையே உள்ள வித்தியாசம். இவை யாவும் கவலைக்கு வித்தாகின்றன. மனதைக் கடமையில் செலுத்தி இடையறாத முயற்சியுடன், முறையான திட்டத்துடன் செயல்பட்டால் இவை அனைத்தையும் சரி செய்ய முடியும்.

ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அவை வந்து கொண்டும் போய்க் கொண்டும் தான் இருக்கும். பிரச்சினைகளைக் கண்டு பயந்துவிடக் கூடாது. வாழ்க்கையின் ஒரு பகுதி தான் பிரச்சினை. கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டன என்பதை எண்ணிப் பாருங்கள். அதே போன்று தற்பொழுது தோன்றியுள்ள பிரச்சினையும் காலத்தில் அவ்வாறே தீர்க்கப்பட்டு விடும்.

பிரச்சினையைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டுத் தைரியமாக அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிரச்சனைக்குத் தீர்வு உடனே கிடைக்காவிட்டால் இயற்கைக்கு விட்டுவிடுங்கள். சிறிது காலம் பொறுத்திருங்கள். சரியான நேரத்தில் சரியான தீர்வு தானாகவே கிடைத்து விடும். இங்கு இயற்கைச் சட்டத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் தான் எந்த ஒரு பிரச்சினையும் பெரியதாகத் தோன்றும். அதற்குத் தீர்வு அதனுள் இருக்கிறது. அது தவறாமல் கிடைத்துவிடும். இதற்கென நாம் ஓர் வழிமுறையை ஏற்படுத்திக் கொண்டு சரியாக அதைக் கடைபிடித்து வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு பெற்று விடலாம். அதனால், மனதின் சுமையும் நீங்கிவிடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

"மனதின் தப்புக்கணக்கே - கவலை.
(Worries are MisCalculation of Mind)"

.
"கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்,
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இறைவனின் நிழல்

மனத்தின் இயக்க நிலைகளை இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம். ஜீவகாந்தமானது உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களின் விரைவான சுழற்சியினால் எழும் அலைகளே. ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களிலிருந்து இவ்வாறு வெளியாகும் அலைகள் அனைத்தும் உடலில் சுழன்று கொண்டே இருக்கின்றன.

பொதுவாக, எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும் திண்மை உடைய பகுதி மத்தியில் போய்ச் சேர்வதும், லேசான பகுதி புறத்தே நிற்பதும் துல்லியச் சமதளச் சீர்மை (Specific Gravity) தத்துவம் ஆகும். இந்த இயல்பின்படி, ஜீவகாந்தத்தின் பெரும்பகுதி தனது சுழலியக்கத்தினால் உடலின் மையப் பகுதிக்கு வந்து சேருகிறது. அங்கு இறுகி, குறுகி அழுத்தம் பெற்று ஜீவகாந்த நிலைக்களமாக அமைகிறது. இதனைக் கருமையம் என்றும், ஆன்மா என்றும் வழங்குகிறோம்.

மனிதன் எந்தச் செயல் செய்தாலும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும், ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் கருமையத்தில் போய்ச் சேருகின்றன. இந்த நிகழ்ச்சியை வினைப்பதிவு என்று கூறுகிறோம். பதிவு என்றால் இங்கு எழுதி விளக்கக் கூடியதோ, அல்லது புலன்களுக்கு எட்டும்படியாக அடையாளம் கொடுக்கக் கூடியதோ அன்று.

கருமையத்தில் இறுகிக் குறுகி, நிலை பெற்றிருக்கும் ஜீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செயல் அல்லது அனுபோக அனுபவங்களுக்கும் ஏற்ப, தரமாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி மாற்றம் பெற்ற தன்மைகள் அதே மன அலைச் சுழல் மறுபடியும் வரும்போது, மூளையின் காந்த அலைகளால் விரித்துக் காட்டப்படுகிறது. அப்பொழுது உண்டாகும் அகக்காட்சியே எண்ணங்கள்.

இறைநிலைக்கும் மன நிலைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும் என்றால், அவற்றை உருவத்துக்கும், அதிலிருந்து தோன்றும் நிழலுக்கும் ஒப்பிடலாம். உருவத்தை விட்டு நிழல் பிரிவதே இல்லை. ஆனால், நிழலை எடுத்துக்காட்டவல்ல ஒளியானது உருவத்தின் மீது படும் கோணத்திற்கு ஏற்ப, நிழலானது அளவில் மாறுபடும். அது போன்று மனிதமனம் இறைநிலையை விடுத்து இயங்குவதே இல்லை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மாய காந்த விளைவுகளே இன்பதுன்பம் :

"காந்த நிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே
கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்,
மாந்தருக்குள் ஊறு ஓசை மணம் ஒளிசுவை மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்;
சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட
சந்தேகம் சிக்கலின்றிச் சாட்சி கூறும் உன் உளம்,
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொது இது
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே".

.
"நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,
மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,
நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம்உட லுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 26 செப்டம்பர், 2015

வினையும் பயனும்

நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றைச் செய்யக் கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடைவிதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப் பொறுத்தமாக இருந்திருக்கும். நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில், "இதைச் செய், அதைச் செய்யாதே" என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது "சொர்க்கம்", "நரகம்" என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான்; தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள். விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுவரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?

இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், "ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு" என்ற இயற்கையின் நியதியை (Law of Nature) மனிதன் உணர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும். "இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா? என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக் கூடிய ஒரு உண்மையை, இயற்கை அமைப்பை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம். செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும்போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான், தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம். 'வினையும் பயனும்' என்ற முறையிலே ஒரு தெளிவான பொறுப்புணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோருக்கும் அவசியம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

"வினைத்தூய்மை பெறவேண்டின் மனத்தின் தூய்மை
வேண்டுவது இன்றியமையாத தாகும்.
வினைத்தூய்மை ஒழுக்கமுடன் கடமை, ஈகை,
விளங்கும் அறநெறி நிற்க விரைந்து ஓங்கும்;
வினைத்தூய்மை வித்தான மனத்தின் தூய்மை
விண்ணுணரும் அகத்தவத்தால் ஓங்கும் உய்ய
வினைத்தூய்மை மனத்தூய்மை ஒன்றை ஒன்று
உயர்த்தி மனிதன் தெய்வமறியச் செய்யும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஓர் உலகம்

மனித இனம் வாழ்வதற்கு ஒரே உலகம் தான் இருக்கிறது. மனிதனுக்குத் தேவையான நீரை வழங்குவதற்குக் கடல் ஒன்று தான் உள்ளது. எல்லோரும் மூச்சு விடுவதற்குரிய காற்றும் ஒன்று தான் உண்டு. உயிர்கட்கு எல்லா வகையிலும் ஆதாரமாக இருக்கக்கூடிய சூரியனும் ஒன்று தான். இந்த நான்கில் ஒன்றையுமே மனிதன் செய்தது இல்லை. மேலும், உலக விரிவான மனித சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் அறிவின் திறமையாலும், உடல் உறுப்புகளின் செயல் திறமையினாலும் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களின் மூலம் மனிதகுலம் மொத்தமும் வாழ்ந்து வருகிறது. இவ்வாறே ஒவ்வொருவருடைய தினசரி வாழ்க்கையும் அமைந்து உள்ளது.

மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது. எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.

அமைதி, பெற வாரீர் வாரீர்.. .. ..)

அன்பின் அழைப்பு :

"விருப்பம், சினம், வஞ்சம், மதம், பால்கவர்ச்சி
விளைவறியா கடும்பற்று என்ற ஆறும்
உருக் குலைந்து நிறைந்த மனம், சகிப்புத்தன்மை,
உளமார்ந்த மன்னிப்பு, மெய்யுணர்வு,
கருத்துடைய கற்பு நெறி, ஈகை யென்ற
களங்கமிலா நற்குணங்களாக மாற்றும்
பொறுத்த முள உளப்பயிற்சி முறை பயின்று
புகழ், இன்பம், அமைதி, பெற வாரீர் வாரீர்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 24 செப்டம்பர், 2015

எளியமுறைக் குண்டலினி யோகம் :

உயிர்த் தொடர்பான இயக்கம், இருப்பு, இயல்பு ஆகியன மறை பொருள்களாகவே உள்ளன. அவைகளைப் பற்றிய முறையான விளக்கமும் தெளிவும் ஒருவரிடம் அமைந்தால் தான் அவரால் பொறுப்புள்ள ஒருவராக வாழ இயலும். அத்தகைய விளக்கத்தையும் தெளிவையும் தந்து வருவதே எளியமுறைக் குண்டலினியோகம்....

உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பின் கீழ் அளிக்கப்பட்டு வரும் எளிய முறைக் குண்டலினியோகப் பயிற்சியின் கீழ், தவம் (Meditation) தற்சோதனை (Introspection) குணநலப்பேறு (Sublimation) முழுமைப்பேறு (Perfection) என்ற நான்கு வகையான பயிற்சிகள் நல்கப்படுகின்றன. இவற்றுள் மூலாதாரத்தில் குண்டலித்துக் கிடக்கும் உயிர்ச்சக்தியை, கீழிருந்து மேலோங்கச் செய்து, ஒவ்வொரு மையத்தில் நிறுத்தி இயக்கி மேல் நிலைக்குக் கொண்டு வருவதே தவம் என்கின்றோம். இதனைச் செய்ய, பழங்காலத்தில் பல ஆண்டுப் பயிர்சியும் குருவினிடம் ஒடுக்கமும் இன்றியமையாதன என்றனர்; இதனைக் கடுமையான முறையாக்கிக் காட்டினர்; சில காலங்களில் இடையில் நிறுத்தி இக்கட்டையும் பெற்றனர். ஆனால் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' முறைப்படி ஏற்கனவே 'குண்டலினி சக்தி' பயிற்சி பெற்றவர்கட்கு ஆசிரியப் பயிற்சி அளித்து, விரும்புவோருக்கு வழிகாட்டி அதே உயிர்ச்சக்தியை மேலே கொண்டு வரச் செய்கின்றோம். இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அந்த உணர்வை உணர்வர்; எளிமையைத் தெளிவர்.

இந்தத் தவமுறையைத்தொடர்ந்து பயில்கின்றவர்கட்கு அனுகூலங்ககள் பல ஏற்படும். கூறிய அறிவு, தெளிந்த சிந்தனை, விழிப்பாற்றல் ஆகியன உண்டாகும். மன அமைதி நிலவும். அளவறியாது உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தும் போது உடற் செல்கள் வலுவிழந்து, உறுத்தல்கள், உளைச்சல்கள், உறுமல்கள், சோர்வுகள், துன்ப உணர்வுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இன்னும் எல்லை மீறும் போது நோய்கள் வருகின்றன. இன்னும் எல்லை மீறும் போது மரணமே ஏற்பட்டு விடுகின்றது. எந்த உயிராற்றலின் ஒழுங்கான வளர்ச்சி இந்த நலன்களை எல்லாம் தருகின்றதோ அந்த ஆற்றலின் மீது கருத்தை வைத்துச் செய்யப்படுவதே இந்தத் தவமுறையாகும்.

உயிராற்றலின் மேல் கருத்தை வைத்துத் தவம் இயற்ற உயிராற்றல் குண்டலித்து மேலே எழ எழ ஆற்றற்கதிர் அலைகள் ஏற்படுகின்றன. அந்த அலை இயக்கத்தின் ஒரு பகுதி மன இயக்கமாகவும், ஒரு பகுதி உடல் இயக்கமாகவும் மாறுகின்றது. இந்த இரண்டையும் பண்படுத்தும் வன்மையதே குண்டலினியோகம்.



 "அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்".

.
அழைப்புக் கவி : ( பாடல்)

அன்பர்களே வாரீர் !
அறிவின் இருப்பிடம்

.
அறிந்து இன்பமுற ( அன்பர்களே வாரீர், அறிவின் ...)

இன்பநிலையதை ஏகநிலையதை
அன்பு நிலையதை
அறிந்திடலாம் இன்று ( அன்பர்களே வாரீர், அறிவின் ...)

.
தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்
என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்
அன்றாட வாழ்வை அறிந்தனுபவிக்க
இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்
( அன்பர்களே வாரீர், அறிவின் ...)
.
பூரணதூலமும் பொருந்து சூக்குமம்
காரணமான கருவையு மறிந்து
ஆரணமான அனுவறிந்து சுடர்
தாரக மவுன தவத்தில் நிலைபெற
( அன்பர்களே வாரீர், அறிவின் ...)
.
எத்தனை ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்
இவ்வுலகெங்கும் பேரண்ட முழுமையும்
அதன் அருளாட்சியாக நிறைந்துள்ளான்
அறிவை விரித்து அனைத்தும் துய்த்தின்புற
( அன்பர்களே வாரீர், அறிவின் ...)
.
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்
நீளாயுள் உடல்நலம் நிறைசெல்வம் மெய்ஞ்ஞானம்
ஓங்கிச் சிறப்புற்று உள்ள நிறைவோடு
உள்ளொளிபெருக்கி உண்மைப்பொருள் காண
( அன்பர்களே வாரீர், அறிவின் ...)

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 


புதன், 23 செப்டம்பர், 2015

பிரவிர்த்தி - நிவர்த்தி மார்க்கங்கள்

பெரும்பாலோர் வாழ்வில் இன்பம், துன்பம் இந்த இரண்டில், ஒன்றை மாற்றி ஒன்றை அனுபவித்து வருகிறோம். இந்த இன்ப, துன்பங்கள் எவ்வாறு உண்டாகின்றன என்று ஆராய்ந்தால் இரண்டு விதமான உணர்ச்சிகள் தான் நமக்குத் தெரியும். ஆனால், இன்னொரு உணர்ச்சி இருக்கின்றது. அதற்குப் பெயர் அமைதி அல்லது சம உணர்வு என்பது. அமைதியான உணர்விலிருந்து சிறிது ஊக்குவித்தலினால் ஏற்படுகிற உணர்வுதான் இன்பம். இந்த ஊக்குவித்தலினால் அணு அடுக்குச் சிதைவு ஏற்பட்டு, உயிர்ச்சக்திக்கு அழிவு ஏற்படுகின்ற காலத்தில் அதுவே துன்பமாக மாறுகிறது. அமைதி நிலையில் (Normal) இருக்கின்றபோது அதைச் 'சத்துவகுணம்' என்று கூறுவார்கள். அப்போது மனமானது நல்ல எண்ணத்தோடு தெய்வீக நிலையில் இருக்கிறது. அமைதி நிலையிலிருந்த உணர்வு ஊக்குவிக்கப்பட்டு ஏதோ ஒன்றை அனுபவிக்கும்போது ஏற்படும் இன்பம் இருக்கிறதே அதை 'ரஜோ குணம்' என்றும் அதற்கு மேலே துன்பப்படுகின்ற அளவுக்கு இயக்கமும், செயலும், வேகமும் உண்டாகின்ற போது 'தமோகுணம்' என்றும் பிரித்துச் சொல்லப்படுகின்றது.

நாம் பெரும்பாலும் இன்ப, துன்பம் என்ற இரண்டையும் உணர்ந்துள்ளோம். ஆனால், அமைதி என்ற ஒரு நிலை உண்டு. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பசி எடுக்கிறது. அது துன்பமாக உணரப்படுகிறது. அந்தப் பசியை உணவினாலே நீக்கிக் கொள்ளுகின்றோமே அது இன்பம். துன்பத்திலிருந்து மீட்டுக் கொள்ளும் ஒரு இதம் இருக்கின்றதல்லவா? அதை இன்பமாகத் தான் கொள்ள வேண்டும். இப்போது பசி நீங்கிவிட்டது. இன்பமும் இல்லை. துன்பமும் இல்லை. அந்த இடத்திலே அமைதி இருக்கிறது. அதுதான் (Normal) அமைதி என்பது. இனபமும் அற்று, துன்பமும் அற்று அறிவு, மனம், உடல் என்ற நிலையிலே இருப்பது தான் அமைதி. இந்த அமைதி நிலைக்கு வருகின்றபோது தான் அறிவு தன்நிலை நாடித் தன்னோடு, தன்னுடைய முழுமையில் இணைகின்றது. அப்படித் தன் நிலையில் இல்லாமல் இருந்தால் முழுமை நிலை, பகுதி நிலை என்று இரண்டு பிரிவாகி அந்த இடத்தில்தான் "தன்முனைப்பு" (Ego) உண்டாகிறது. உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தான் முனைப்பு உண்டாகின்றது. அங்கு பலவிதமான முரட்டுச் செயல்களும், நோய்களும், தீச்செயல் பதிவுகளும் உண்டாகின்றன. தன்முனைப்பை மாற்றி வாழ்வோம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
அகத்தவ மன்றம் :

"தன்முனைப்பு ஒருவரிடம் இருக்குமானால்
சாட்சியுண்டு பேராசை, சினம், பொறாமை,
என்கருத்தும் செயல்களுமே நீதியென்று
எண்ணல், பிறர் வருத்தத்தில் இன்பம்காணல்;
புன்செயலின் புலன் மயக்கில் ஆழ்ந்து ஆழ்ந்து
புகழ்தேட பொருள் பெருக்கச் செயல்கள் செய்வார் ,
வன்மனத்தோடெப் போதும் வெறுப்புணர்த்தும்
வகையில் முகம் கடுத்திருத்தல் இவையே சான்றாம்".

.
இன்பம் துன்பம் :

"இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்
எங்கிருந்து தோன்றுகின்ற தெனவாராய்ந்தேன்;
இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்
எங்கும் நிறைந்துள்ளது; அனுபோகத்திற்கு
இன்பத்தின் அளவுமுறை மாறும்போது
ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்
இன்பத்தின் மறுபெயராம் துன்ப மாயும்
இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி..

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

ஞான வாழ்வு

 யாரும் ஞானத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க தேவையில்லை; காஷாயம் தரித்து காடேக வேண்டியதில்லை; வாழ்வதற்குத் தான் ஞானம் பயன்படவேண்டும்" என்ற உண்மையை விளக்க முற்பட்டேன். விஞ்ஞானம் இன்று நம்மிடம் மிகுந்திருக்கலாம். அதெல்லாம் புலன்களுக்கான உப கருவிகளைத் தான் உண்டாக்க பயன்படுத்தப்பட்டது. உன்னை நீ யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அ...தற்கு எந்த உபகருவியும் பயன்படாது. நீ உன் உள் ஒடுங்கித்தான் பார்த்தாக வேண்டும். இப்பயிற்சி பகுத்தறிவோடு தொகுத்துணர்வு என்றும் சிறப்பை அளிக்கும்; அறிவு விரிந்த நிலையில் ஒவ்வொரு செயலையும் திறமையோடு ஆற்றி ஆற்றி வெற்றி பெறும்.

ஆகவே தான் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களைப் பாதிக்கும் என்பதையும் தன்னியக்கம் தொடர்பியக்கம், பிரதிபலிப்பு இயக்கம், எதிரியக்கம், விளைவு ஆகியவை மூலம் தன் செயலின் பயன் தன்னையே நோக்கித் திரும்பி வரும் என்ற பேருண்மையும், காரண காரிய விளக்கமும் மனத்திற்கு தெளிவாகப் புரியவரும். ஆக மனம், அதற்கு மூலமானது உயிர், அதற்கும் மூலமான இருப்பு நிலை மெய்ப்பொருள், என்ற உண்மை விளக்கம் பெற்றால் தான், தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப்பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறதென்கிற விழிப்பேற்படும். இந்த விழிப்பைத் தந்து முறையான பயிற்சி மூலம் முழுமைப் பேறடையச் செய்யும் பெரு நெறியே எளிய முறைக் குண்டலினி யோகம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
முயற்சியளவே ஞான விளைவு :

"வித்து, நிலம், உரம், தண்ணீர் காவர்கேற்ப
விளைவுதரும்; அதுபோல உனக்கு ஆசான்
அத்துவித தத்துவ வித்தறிவி லிட்டால்
அதற்கொழுக்கம் என்ற உரம், அறிவை ஒன்றும்
நித்த தவம், ஆராய்ச்சி என்ற தண்ணீர்
நீ சலனமுற்று அறுகுணங்களாகா
வித்தை எனும் காவல், இவையனைத்தும் வேண்டும்
விளைவாக நீயடையும் கனியே ஞானம்".

.
சுவாச அப்பியாசத்தால் மாத்திரம் ஞானம் உண்டாகி விடாது :

"இடக்கலையும், பிங்கலையும் மாற்றி மாற்றி
இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர் ?
விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்
வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை;
அடக்கநிலை அறிவுக்கு அறிவேயாகும்,
அதற்கு இடம் உனது இருபுருவமையம்
தொடக்குருவால் அவ்விடத்தைத் தோன்றும் காட்சி
சுய அறிவால் உனையறியும் சாவியாகும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 21 செப்டம்பர், 2015

தவம், அறம் :



ஞானிகள் உலகோர்க்கு நல்வாழ்விற்கென இரண்டு உயர் வழிகளைக் காட்டியுள்ளார்கள். அவை [1] அறம் [2] தவம். தனி மனிதனையும், சமுதாயத்தையும் வளம் பெறச் செய்வதும் மகிழ்ச்சியில் வைப்பதும், அமைதியோடு வாழச் செய்வதும் அறம், தவம் என்னும் இரு உயர் முறைகளேயாகும்....

அறம் என்னும் நெறி மூன்று உறுப்புகளையுடையதாகும். அவை [1] ஒழுக்கம், [2] கடமை, [3] ஈகை என்பனவாகும்.

இயற்கையாக அவ்வப்போது தோன்றும் துன்பங்களைச் சமப்படுத்தி இன்பமாக வாழ்வதற்கு எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் பயன்படுத்துகிறோம். எண்ணம், சொல், செயல் எனும் மூன்றில் எது ஒன்றாலும் ஆற்றும் எச்செயலும் வினை எனப்படும். தனது துன்பத்தைப் போக்க, இன்பத்தை நுகர அல்லது தனது கடமைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் விளைவாகத் தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுணர்ச்சிக்கோ, துன்பம் விளையாத அளவோடு, முறையோடு ஆற்றும் செயல் நெறி 'ஒழுக்கம்' எனப்படும்.

நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறோம். காக்கப் பெறுகிறோம். வாழ்வளிக்கப் பெறுகிறோம். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நாளிலும் எண்ணிறந்த மக்களின் உழைப்பும் உதவியும் பயனாகின்றன. ஒருபிடி உணவை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் அது எத்தனை மக்களின் உழைப்பால் நம் கைக்கு வந்துள்ளது எனும் உண்மை விளங்கும். இது போன்று உடை, உறைவிடம் மற்றும் பல வசதிகளும் பல மக்கள் உழைப்பாலும் உதவியாலும் ஒருவருக்கு கிடைப்பது விளங்கும். எனவே ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குக் கடன்பட்டவரேயாவார். இந்தக் கடனை எவ்வாறு தீர்ப்பது ?

தான் அடைந்துள்ள உடல் வளம், கல்வி, தொழில் திறம், செல்வாக்கு ஆகிய நான்காலும் நலமும் வளமும் ஓங்கும் வகையில் தொண்டாற்றிச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கடனைத் திருப்பித் தந்து கொண்டிருக்க வேண்டும். கடன் திருப்பும் கருத்தே கடமை எனும் சொல்லாக [கடன் + மை = கடமை] வழக்கில் வந்துள்ளது.


விரிந்த அறிவே இன்பம் விளைக்கும்:-

"இயற்கைச் சமுதாயம் சூழ்நிலை தேவை பழக்கம்
இவ்வைந்து கோணத்தில் இயங்குகிறான் மனிதனவன்;
இயற்கைச் சமுதாயம் இரண்டை உணர்ந்தும் மதித்தும் -
எஞ்சிய மூன்றைச் சீராய் இணைத்தாற்ற இன்பமயம்."

.
வினைப் பயன் :

"வினைக்கு ஒரு விளைவுண்டு. உடல் உள்ளத்தின் விரைவாற்றலுக்கு அது ஒத்தால் இன்பம்.
முனைத்து அது பரு உடற்கோ மூளைக்கோ ஓர்
முரண்பட்ட விளைவானால் துன்பம் ஆகும்.
தனக்கும் அது பிறருக்கும் உடல் மூளைக்குத்
தவறாக அணு அடுக்கைச் சீர்குலைத்து
மனக்களங்கம் உடலில் நோய்ப் பதிவாய்க் கொள்ளும்.
மதித்து வினை விளைவுகளைக் கணித்து வாழ்வீர்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

விழிப்பு நிலை :

இயற்கை நியதியை - ...ஒரு செயலின் விளைவிலிருந்து ஒரு போதும் தப்பமுடியாது என்ற நியதியை உணர்ந்து எப்போதும் விழிப்போடு செயலாற்றப் பழகிக் கொள்ள வேண்டும். எண்ணம், சொல், செயல், மூன்றிலும் விழிப்போடு இருக்க வேண்டும். இதற்கு தவமும் தற்சோதனையும் மிகவும் உதவியாகும். இவற்றால் அறிவு கூர்மையடைந்து கிரகிக்கும் சக்தி (Receptivity) அதிகப்படும். பிறரோடு ஒத்துவாழும் நிலையும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சகித்துப் போகும் நிலையும் (Adaptability) உண்டாகும். இதனால் தன்னலங்கருதாத தகைமையுணர்வு (Magnanimity) மேலோங்கும். இவற்றால் தீமை விளைவிக்கும் செயலில் ஈடுபடமுடியாத நிலை, ஆக்கச் செயலில் மட்டுமே ஈடுபடக் கூடிய தெளிவு (Creativity) தானே உண்டாகிவிடும். இவையே மன அமைதிக்கு அடிப்படையாகும். விரிவு, விளக்கம், விழிப்பு என்ற நிலைகளும் கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப்போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல் ஈடுபாடு ஆகியனவும் வளர்க்கப்படும் அளவுக்கு மன அமைதியும் கைகூடும்.

இவற்றை அறிவால் அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அனுபவபூர்வமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து பயன் காண வேண்டும். உலகெங்கும் சமாதானத்தையொட்டி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு உள்ளதை இன்று காணமுடிகிறது. உலகிலுள்ள அரசியல்வாதிகளும், அறிஞர்களும், யுத்தம் செய்து தான் வாழவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள். இவர்கள் ஒன்றுகூடிப் பேசுவார்களேயானால் யுத்தமின்றி வாழமுடியும் என்ற தீர்மானத்திற்கு வந்து அதற்கான திட்டங்களையும் வகுப்பார்கள். ஆகவே சோர்வின்றி நம்பிக்கையோடு நம் கடமையை செவ்வனே செய்து வருவோமாக.



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
உலக நல வேட்பு :

"உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்
உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்
உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்
உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்".

.
உலக ஆட்சி ஏற்படும் காலம் :

"ஆண்டு ஐம்பதுக்குள்ளே உலகோர் இந்த
ஆட்சி முறையை நன்றென் றேற்றுக்கொள்வார்.
மீண்டும் ஒரு நூற்றாண்டின் முடிவுக்குள்ளே
மேலோங்கி உலகெங்கும் அமுலாய் நிற்கும்.
நீண்டு விடுகிறதே நாள் அதிகம் என்று
நினைந்து, ஆதரவாளர் சோர்வு கொள்வார்.
வேண்டுமென்று நான் விரும்பிக் கணிக்கவில்லை;
விரிந்து நின்று ஆய்ந்து கண்ட முடிவு ஈது".

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

 

சனி, 19 செப்டம்பர், 2015

சீரிய வழிகள்

நமது குண்டலினியோகம் நான்கு உறுப்புகளைக் கொண்டு உள்ளது. அவை அகநோக்குப் பயிற்சி, தற்சோதனை, மனவினைத் தூய்மை, முழுமைப்பேறு (Meditation, Introspection, Sublimation and Perfection). இந்நான்கும் ஒன்றை ஒன்று தழுவி நிற்கின்றன. ஒன்றால் ஒன்று வளம் பெறுகின்றன. அறியாமையால் வந்த களங்கத்தைப் போக்கி, அதனால் விளைந்த வாழ்க்கைத் துன்பங்களைக் குறைத்து, அமைதியை மனிதனுக்கு அளிக்கவல்லது குண்டலினி தவம். சாதனை செய்து அதன் மூலம் பயனடைய வேண்டிய ஒரு பெரிய நற்பேறு இந்தத் தவம். இதன் மதிப்பு உணர்ந்து பயின்று பயன் பெறுவீர்களாக.

தவத்தில் உட்காரும் போது மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று சில அன்பர்கள் சலிப்படைகின்றார்கள். இதுதான் இயற்கை நியதி. நாம் வாழ்வில் பெற்ற அனுபவங்கள் யாவும் நம்மிலே பதிவாகி அவை எப்போதும் எண்ணங்களாகப் பிரதிபலித்துக் கொண்டே தான் இருக்கும். இந்தப் பதிவுகளே நமது வாழ்க்கை நியதி. நாம் சில காலம் தவம் பயின்றால் பிறகு நமது மனம் வலிவு பெறும்போது, நாம் எப்போதும் விழிப்பு நிலையில் நம்மைப் பழக்கிக் கொள்ளும்போது, மனம் அலையுறுவது படிப்படியாகக் குறையும். தவம் உயர, உயரத் தற்சோதனையில் ஆழ, ஆழ அந்த அளவிற்கு நமது மனம் நிலைபெறக் காணலாம்.




.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
இறை நிலை :
"தெய்வத்தை நாடுவதும் தெளிந் தறிவில் தேறுவதும்
திருநிலையாம் மனிதனவன் பிறவி நோக்கம் பயனாம்;
தெய்வநிலை தெரிந்து கொண்டேன், திருவருளே நானாகத்
திகழும் அனுபவம் எனக்கு இல்லை யென்பர் சில்லோர்; தெய்வமெனும்பாலைப் பிறை இட்டுத்தயிராக்கிப் பின்
தேடுகிறார் பாலை, அதைக் காணேன் என்றால் மயக்கே
தெய்வம் உயிர்க்குள் அறிவாய் அதன் படர்க்கையிலே
திகழ்கிறது மனமாகத் தேடுவது எதை? எங்கே?".
.
ஞானம் தேடும் பக்தர்கள் :
"தேடுகின்ற பொருள் என்ன ஏன் நமக்கு
தெரிந்தவர் யார் கிடைக்குமிடம்எது ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்,
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்;
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார், உளம்நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்துப் போவதைப் போல முரண்பாடன்றோ?"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 
 
 

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

மன அமைதி :



முதலில் மனம் என்பது யாது, அதன் அமைதி குலையக் காரணம் என்ன என்பதை சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு தேவை இருக்கவே செய்கிறது. அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள, நிறைவு செய்து கொள்ள ஆசை எழுகிறது. அதற்கு முயற்சி செய்ய வேண்டி ஏற்படுகிறது. முயற்சியால் வெற்றியடைகிறான். அதன் பயனை அனுபவிக்கிறான். அது இன்பமோ துன்பமோ கொடுக்கிறது. அந்த செயலை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறான். இது மனதில் பதிவு செய்யப்படுகிறது. இப்படி உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்று 10 படித்தளங்களில் விரிந்து செயல்படும் உயிரின் படர்க்கை நிலையே மனமாகும். ஆகவே இந்த மனதை முதலில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இயற்கையமைப்புக்கு ஒத்து மனம் செயல்படும்படி பழக்க வேண்டும். இயற்கைக்கு முரண்பட்ட செயலை தவிர்க்க வேண்டும். விளைவை நன்றாக கணித்துக் கொண்ட பிறகே செயல்படத் துவங்க வேண்டும்....

நம்மிடம் பெரும்பாலும் பொருள் வயப்பட்ட உணர்வே தலை தூக்கி நிற்கிறது. புலன் வயப்பட்டு ஆசாபாசங்களுக்கு அடிமையாகி மயக்கத்தில் செயலாற்றுகிறோம். அதனால் துன்பம் விளைந்து அமைதி குறைகிறது. பலகோடி அணுக்கள் சேர்ந்த கூட்டியக்கமான உடல், இந்த உடலில் இயங்கும் உயிர், உயிரின் படர்க்கையாற்றலான மனம், இவற்றின் இயக்கத்தை உணரும் அறிவு இவையாவுக்கும் மூலாதாரமான பரம்பொருள், இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உடலில் ஆறாவது அறிவாக இருக்கும் மனம், பரம்பொருளை உணர்ந்து முழுமையடையும் பொருட்டே எழுச்சி பெற்றுள்ளதாகும். இந்த மனத்தைப் பண்படுத்த எழுந்ததுவே அறமும் மதமுமாகும். பிற உயிர்படும் துன்பத்தை ஒத்து உணர்ந்து அதைப் போக்க வேண்டுமென்று எழுந்த கருணை உணர்வே அறமாகியது. தன்னலம் கருதி மயக்க நிலையில் புலன் வயப்பட்டு காமம், கோபம், பேராசை, கடும்பற்று, அகந்தை, வஞ்சம் என்ற ஆறு குணங்களாக மாறி செயல்படுவதால் தான் துன்பம் எழுகிறது. இத்துன்பத்திலிருந்து மீள வேண்டுமானால் மனவிரிவு வேண்டும்.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 "அனைத்தியக்கப் பேராற்றல் பிரம்மம்தெய்வம் என்போம்,
அறிந்தவர்கள் அவ்வாற்றல் வழிவாழ்வோ ரெல்லாம்
முனைப்பொழிந்த ஞானியென்றும் முனிவரென்றும் பலபேர்
முன்னாளில் சொல்லியுள்ளார்; முற்றுணர்ந்த தெளிவால்
வினைப்பதிவில் தீயவற்றை வேரறுத்து வாழ்வில்
விலங்கினத்தின் செயலொழித்து விழிப்போ டறநெறியில்
அனைத்துலக மக்களும்மெய் யறிவுடனே வாழும்
அந்த பெரும் நந்நாளை வாழ்த்திவர வேற்போம்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 17 செப்டம்பர், 2015

வாழ்வில் வெற்றி ஒளி வீசட்டும்

சூடுள்ள பாத்திரத்தைக் கந்தைத் துணி உதவி கொண்டோ, கொரடாவின் உதவி கொண்டோ, அடுப்பிலிருந்து இறக்கிப் பயன் காண்பது போல, கருத்து வேறுபாடு உடையவர்களோடு மனநிலையுணர்ந்து, அன்பு காட்டல், பொறுமை கொள்ளுதல், கடமையுணர்ந்து ஆற்றல் எனும் மூன்றிணைப்புத்திறன் கொண்டு பழகி வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் காணவேண்டும். இந்த முறையில் விழிப்போடு வாழ்வை நடத்தும்போது வெறுப்புணர்ச்சி என்ற தீமை அணுகாது. சினமும், கவலையும் எழா. வளரா. வாழ்வில் நாளுக்கு நாள் அன்பும், இரக்கமும், அமைதியும் ஓங்கும்.


இந்த விளக்கத்தை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு கணவன்-மனைவி, பெற்றோர், மக்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என்ற எல்லா உறவுகளிலும் பயன்படுத்தி முதலில் வெற்றி பெறுங்கள். இதன் விளைவாக வெளி உலக மக்களிடம் கொள்ளும் தொடர்பிலும் உங்கள் வாழ்வின் மற்றெல்லாப் பகுதிகளிலும் வெற்றி ஒளிவீசும். போதனை மட்டும் போதாது. சாதனை செய்க.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
இல்லற நோன்பு :

"அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லை தரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்
தன்புகழ் விளக்கம் நல்ல தரமுடைய மக்கள்
தழைப்பார்கள்இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை."

.
தன் குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்பாம் :

"தன் குற்றம் குறை கடமைத் தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்
ஏன் குற்றம் பிறர்மீது சுமத்தக் கூடும்,
ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்
மேன்மைக்கே மனம் உயரும் பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்
நன்மைக்கேயாம் செய்த பாபம் போச்சு
நான் கண்ட தெளிவு இது நலமே பெற்றேன்."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 16 செப்டம்பர், 2015

மனிதனும், இறைவனும்

ஒருவழியில் பார்த்தால் மனிதன் இறைவனைவிட ஒரு படி மேலானவன் என்று கொள்ளலாம். அவனிடம் இறைத்தன்மை எல்லாம் இருக்கின்றன (God is omnipotent). இறைவன் எல்லா ஆற்றலும் நிறைவாகப் பெற்றவன். அத்தன்மை மனிதனிடம் இருக்கின்றது (God is omniscient). இறைவன் எல்லாம் அறிந்தவன். அத்தன்மையும் மனிதனிடம் இருக்கின்றது. (God is omnipresent). இறைவன் எங்கும் இருப்பவன். மனிதனும் அந்நிலையை எய்த முடியும். ஆராய்ச்சியின் மூலமும், யோகத்தின் மூலமும் உள்ளது உள்ளபடியே தன்னுணர்வாக, அகக்காட்சியாகப் பெற்று விட்டால் மனிதன் இறைத்தன்மையை முழுமையாகப் பெறுகிறான்.

மனிதனிடம் கடவுள் எல்லாமே இருப்பதோடு கடவுளை அறிந்து கொள்ளும் பெருமையும் இருக்கிறது. இத்தகைய பெருமை அவனிடம் இருக்க அதனை மறந்து தன் உடல் அளவிலே எல்லை கட்டிக் கொண்டிருக்கிறான். இந்நிலையிலேயிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அவன் தன் உயிரைப் பற்றிய அறிவு பெற வேண்டும். உயிரின் தன்மை என்ன? அதன் மூலம் என்ன? பரம்பொருளே, அதன் எழுச்சி நிலையே உயிராக இருக்கிறது. இன்று இந்த உடலில் உயிர் இருந்தாலும் பரம்பொருளின் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து இருந்து கொண்டுள்ளது.

உடலுக்குள் இருக்கும் உயிர், உணர்ச்சியின் அனுபோகத்தில் உடல் வரைக்கும் எல்லை கட்டிக் கொண்டு இருந்தாலும் தன் முழுமையை உணர்ந்து கொண்டால் - தன் மூலத்தையும், வியாபகத்தையும் அறிந்து கொண்டால் எல்லாவற்றிலும் தன்னையே பார்க்கின்ற ஒரு தன்மை வந்து விடுகின்றது. சிறுமை, பெருமை, தன்முனைப்பு எல்லாம் நீங்கி விடுகின்றன. இந்த நிலையில் பிறரை மதிக்கவும், ஆதரிக்கவும், பரிவு காட்டவும், மேல்நிலைக்குக் கொணரவுமான பொறுப்புணர்ச்சியைப் பெறுகிறான்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் :

"உன்னையோ கடவுளையோ அறிய வென்றால்
ஒரு குறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து
தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும்
தனிக்கருணை வடிவான குரு வடைந்தால்
அன்னை வயிற்றடைந்துருவாய் உடலாய் வந்த
ஆதி கருவைப் புருவத்திடையுணர்த்தப்
பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க,
உந்தன் பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

நிறைசெல்வம் :



சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றால் என்ன ஆகும் என்றால் நம்மைச் சுற்றி எத்தனை மக்கள் இருக்கிறார்களோ, நமக்குத் தொடர்புள்ள அவர்கள் உயிரோடு ஊடுருவி ஒரு நட்பை வளர்த்துக் கொள்ள மடியும். எத்தனை பேருடைய நட்பு நல்ல முறையிலே ஏற்பட்டுக் கொண்டிருக்குமோ அந்த அளவுக்கு மனதிலே நிறைவு உண்டாகும். அதேபோல் வெறுப்புணர்ச்சி கொள்கிறோம் என...்றால், ஒவ்வொரு வெறுப்புணர்ச்சியும் ஒருவரைத் தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்கும். அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவராக நமக்கு தெரிந்தவர்களோ, நெருங்கியவர்களோ ஒதுங்கிக் கொண்டே இருப்பார்களானால் முகமலர்ச்சி ஏற்படவே ஏற்படாது.

ஆகையினால் எப்பொழுதுமே நட்பை விருத்தி செய்து கொள்வதற்கு நம்முடைய செயலில், இவருக்கு என்ன நன்மை செய்ய முடியும், நமது ஆற்றலைக் கொண்டு, இன்முகம் காட்டி என்ன செய்யமுடியுமோ அதைச் செய்து கொண்டே வரும் பொழுது, அதற்காக உங்களுடைய நன்மையை அல்லது இருப்பை அழித்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு செய்தாலே போதும், நாம் ஒருவருக்கு ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால் அதுவே நல்லபடியாக அமையும். அந்த முறையில் எதிர்பார்ப்பதைத் தவிர்க்கலாம். இரண்டாவதாக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத் தேர்ந்தெடுத்து அப்படிச் செய்வதற்கு வேண்டிய ஆற்றலை என்னென்ன முறையில் வகுத்து, வளர்த்துக் கொள்ள முடியுமோ, அதை வளர்த்துக் கொள்ளும் போது நிறை செல்வம் இருக்கிற மாதிரி நமது மனநிலை வளர்ந்து கொண்டேயிருக்கும்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
ஆராய்ந்து நட்புகொள் :
"நட்புக்கோர் நோக்க முண்டு நாடுபவர் தரம் ஒக்கும்
கட்புலனுக் கெட்டாது கருத்தை ஊன்றிக் காண்பீர்
உட் பகையைச் சுயநலத்தை உள்வைத்தும் நடிப்பார்கள்
நுட்ப முடன் ஆராய்ந்து நோதல் தவிர்த்தே வாழ்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

திங்கள், 14 செப்டம்பர், 2015

துன்பம் நீங்கிய தூயவர்

நான் ஒரு சாம்யம் (formula) அடிக்கடி கூறிவருகிறேன். அதாவது பாவப்பதிவு என்ன என்றால் அது துன்பம் தரக்கூடிய செயல்களும், அந்தச் செயல்களால் ஏற்பட்ட பழிச்செயல் பதிவுகளுமாகும். அதேபோன்று அந்தத் துன்பத்துக்குரிய பதிவுகளை நீக்கி இயற்கை இன்பத்தைப் பாதுகாத்துக் கொள்ள, அனுபவிக்க, அதன் மூலமாக அறிவுக்கு விடுதலை கிடைத்து நாளுக்கு நாள் அறிவு... மேலோங்க எந்தச் செயல்கள் உதவியாக இருந்தாலும் அவையெல்லாம் புண்ணியம். அந்த முறையில் பார்க்கப் போனால் இந்த உடற்பயிற்சி, தவம் இவை இரண்டும் பாவப்பதிவுகளை எல்லாம் போக்கவல்லன. எவ்வாறு என்றால் நாம் முன்பின் செய்த தவறுகள் காரணமாக உடல் அணு அடுக்குச் சீர்குலைந்து அதன் மூலமாகச் சீர்குலைந்த இடத்தில் மின்சாரக் குறுக்கு (Short circuit) ஏற்பட்டு மனத்திலேயும் உடலியேயும் நோய் தோன்றி அது பரவி பின்னர் நிலைத்தும் இருக்கிறதே, அதுவே வினைப்பதிவாகும். அதுதான் வித்தின் வழியாகக் குழந்தைகளுக்கு கூடப் போவது. இந்தப் பழிசெயல் பதிவுகளிலிருந்து அதனால் விளையும் துன்பங்களிலிருந்து நீங்கிக் கொண்டு விடுதலை பெற்றத் தூயவர்களாக உடலாலும் உள்ளத்தாலும் நன்மக்களாக வாழ வேண்டும். அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தோடு தான் பின்பற்றி வருகிறோம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
வினைப் பதிவு:
"முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு
மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும் உண்டு
பின்னே நீ செய்தவினைக்குப் புலனைந்தும் இயக்கிப்
பெற்றப் பழக்கப் பதிவு உண்டு இம் மூன்றும்
உன்னைநீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்
தன்னில் பதிவான வினைப்பதிவுகளை மாற்ற,
தணிக்க, பொருள் செல்வாக்குப் பயனாகாதுணர்வீர்.
.
வினைப் பயன் :
"வினைக்கு ஒரு விளைவுண்டு உடல் உள்ளத்தின்
விரைவாற்றலுக்கு அது ஒத்தால் இன்பம்
முனைத்து அது பரு உடற்கோ மூளைக்கோ ஓர்
முரண்பட்ட விளைவானால் துன்பம் ஆகும்.
தனக்கும் அது பிறருக்கும் உடல் மூளைக்குத்
தவறாக அணு அடுக்கைச் சீர்குலைத்து
மனக்களங்கம் உடலில் நோய்ப் பதிவாய்க்கொள்ளும்
மதித்து வினை விளைவுகளைக் கணித்து வாழ்வீர்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஆன்ம விழிப்பு

உயிரை அறிய வேண்டுமாயின் படர்க்கை நிலையில் சென்று அலைந்து செயல்படும் மனதை உள் அடங்கச் செய்ய வேண்டும். மனம் எப்போதும் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். உடலில் இரத்தச் சுழல் உள்ளவரை மனமும் சுழன்று கொண்டுதான் இருக்கும். தூங்கும்போது மனம் ஒடுங்குகிறது என்கிறோம். அப்போதும் அது இயங்கிக் கொண்டு தான் இருக்கும். ஆனால் அது புலன்களைக் கடந்து சூக்குமத்தில் இயங்குகிறது. இதையே நடுமனம் (Sub-conscious) அடிமனம் (Super conscious) என்கிறோம். அலையும் மனதை வெளியில் அலைய ஓடாமல் தடுத்து உயிரிலேயே உள்ளொடுங்கும்படி செய்வது தான் அகத்தவம் - அக நோக்குப் பயிற்சியாகும். மனிதன் தான் பிற புறப் பொருள்களோடு தொடர்பு கொண்டு இன்ப துன்ப அனுபவங்களைப் பெறும்போது மனமாக விரிந்து, செயல்படுகிறான். தானே தான் உள்ளொடுங்கும் போது உயிரில் லயமாகி ஆன்மாவாக விளங்குகிறான். தானே தான் பரம்பொருளோடு கலந்து நிற்கும்போது - உயிரின் இருப்பு நிலையான மூல நிலையை அடையும் போது பரம்பொருளாகவும் இருக்கிறான். உயிர் வேறு, மனம் வேறு அல்ல என்ற பேருண்மையை உணர்ந்தும் ஒவ்வோர் உயிரிடத்தும் அன்பும் மதிப்பும் ஏற்பட்டு பிற உயிர்கள் மீது பெருங்கருணையும் தோன்றிவிடும்.

குண்டலினி யோகம் மனிதனை இந்த அளவிற்கு உயர்த்துகின்றது. இதைத் தான் மனவளக்கலை என்று சொல்கிறோம். ஓடித்திரியும் மனதை நம் விருப்பப்படி செயலாற்றும்படி செய்வதற்குத் தான் நமது எளியமுறைக் குண்டலினி யோகம் தேவைப்படுகிறது. ஓடும் மனதை உயிரில் லயிக்கும்படி செய்வது தான் (Apperceptive Meditation) மனதடக்கு முறைத்தவம், புறப்பொருட்களோடு நம் புலன்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது நம் மனம் - நாமே - அதுவாக மாறிவிடுகிறோம். நாம் ஒரு பொருளைக் காண்கிறோம். அப்பொருளை நினைக்கும்போது அந்தக் காட்சியே ஒரு அச்சாக (Mould) அமைந்து அதை நினைக்கும்போதெல்லாம் அதையே நமது அகக் காட்சியாகக் காண்கிறோம். ஆகவே அவற்றை புலன்கள் மூலம் ஒலியாகவோ, ஒளியாகவோ, உணர்வாகவோ, ருசியாகவோ அனுபவிக்கும் போது உயிராற்றல் நம்மிடம் மிகுந்திருப்பின் இன்ப உணர்வாகவும், உயிராற்றல் குறைந்து உடல் தாங்க இயலாத போது துன்ப உணர்வாகவும் பெறப்படுகின்றது. இதைத்தான் போத அறிவு (conscious mind) என்கிறோம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
உள்ளத்தில் கள்ளம் வேண்டாம்:

"உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசினால்,
உள்ளொளி தீயாகி, உடலைக் கெடுத்திடும்".

.
மனமே இயற்கையின் மாநிதி:

"மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனமதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே
மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம்
மனத்திலே உல எல்லாம் மற்றெங்குத் தேடுவீர்?.

.
மனத்தூய்மை:

"பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் நான்கிலே
புகுந்தழுந்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்
இருள் நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்;
இறை நிலையே எங்கெதிலும் இருப்பாய் அமர்ந்தாற்றிடும்
அருள் நடனக் காட்சியை அகத்துணர்வாய்க் கொள்ளுவீர்,
அப்போதும் எப்போதும் அறிவு விரிவாகியே
மருள் நிலையில் ஏற்ற ஆசை மற்றும் பழிச்செயலெல்லாம்
மாறிவிடும் மெய்ஞ்ஞானம் மலரும் உள்ளொளி என".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 12 செப்டம்பர், 2015

எண்ணம் எங்கும் செல்லும் :...


.
எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும்போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு ஒரே வழிதான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை விழிப்புடன் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
.
"எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது, அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும் அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".
.
எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
பண்புப் பயிற்சி :
"விழிப்பு நிலை என்ற ஒரு வெளிச்சம் கொண்டு
விருப்பு வெறுப்பெனும் சுழலில் அலைமனத்தின்
அழுக்கைத் தற்சோதனையால் துடைத்து வந்தால்
அன்பூறும் கடமை யுணர்வாகும் வாழ்வு;
பழுத்துவரும் அறிவு அந்தப் பக்குவத்தால்
பலப்பலவாய் வாழ்வில் வளர் சிக்கல் தீரும்,
முழுக்கல்வி இது, உண்மை அறிவிற்கு எட்டும்
முறையாகப் பயின்றிடுவீர் வெற்றி காண்பீர் ! "
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.